மின்னுவதெல்லாம் பொன்னல்ல... நகைக்கடையில் திருடனுக்கு கிடைத்த பாடம்!
சீனாவில் திருடன் ஒருவன் போலி நகைக்கட்டிகளை திருடி ஏமாறிய சம்பவம் நடந்துள்ளது.
பீஜிங்: சீனாவில் நகைக்கடை ஒன்றில் கஷ்டப்பட்டு கொள்ளையிட்டு, பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த போலி நகைக்கட்டிகளை திருடன் எடுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் ஜீஜியாங்க் மாகாணத்தில் உள்ள ஜியாஜிங்க் பகுதியில் நகைக்கடை ஒன்றில் சமீபத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கஷ்டப்பட்டு கடையின் மேல்பக்க கூரையில் துளையிட்டு, உள்ளே இருந்த கண்ணாடிகளை உடைத்து தங்கக்கட்டிகளை எடுத்துச் சென்றார். இது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
ஆனால், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் சிறிதும் வருந்தவில்லை. மாறாக தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என அவர் மகிழ்ச்சி அடைந்தார். காரணம் கண்ணாடியையெல்லாம் உடைத்து கஷ்டப்பட்டு அந்தத் திருடன் எடுத்துச் சென்றது, பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த போலி தங்கக் கட்டிகளை. உண்மையில் அது தங்கம் விற்பனை செய்யும் கடையேயில்லை.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், 'இவர் தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த திருடன்’ என விருது கொடுத்து முகம் தெரியாத அந்தத் திருடனை கலாய்த்து வருகின்றனர்.