வயசோ குறைவு.. புகழோ பெரிது.. நியூசிலாந்து அரசியல் சூறாவளி ஜெசிந்தா ஆர்டெர்ன்
வெலிங்டன்: நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. எனவே ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார்.
ஜெசிந்தா கேட் லாரல் ஆர்டெர்ன் என்பதுதான் இவரது முழுப் பெயர். 1980ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்த, 80ஸ் கிட்ஸ்தான் இவர் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.
நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு தெற்கே, ஒரு மணி நேரம் கார் பயணத்தில் வந்துவிடும் குட்டி ஊர் வைகாடோ. அங்குதான் ஜெசிந்தா பிறந்தார்.
நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா அபார வெற்றி.. 2வது முறையாக பிரதமராகிறார்!
இளம் பிரதமர்
நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் இவர்தான். 37வது வயதில் முதல் முறையாக பிரதமராகினார். 1850 களில் இருந்து பார்த்தால், இவ்வளவு இளம் வயதில் நியூசிலாந்தின் பிரதமரானது இவர்தான். பிரதமராக பதவியேற்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் தனது கட்சியின் தலைவராக கூட இல்லை, என்பதை வைத்தே அவரது அபார வளர்ச்சியை அறியலாம்.
17வயதில் பாலிடிக்ஸ்
கம்யூனிகேஷன் ஸ்டடீஸ் பிரிவில் (2001) இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு முன்பே, ஜெசிந்தா, லேபர் கட்சியுடன் தனது உறவை ஏற்படுத்தி பலப்படுத்தினார். 1999ம் ஆண்டில், தனது 17 வயதில், அவர் அக்கட்சியில் சேர்ந்தார்.
அதிசயம் இல்லை
ஜெசிந்தா பிரதமராக பதவியேற்ற பிறகுதான் அவர் குழந்தை பெற்றுக் கொண்டார். இதன் மூலம், நியூசிலாந்து வரலாற்றில், மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இவர்தான். ஆனால், தன்னை ஒரு ஸ்பெஷல் பெண் என்று யாரும் கூறுவதை அவர் விரும்பவில்லை. "நான் ஒருவித அதிசயப் பெண் என்ற எண்ணத்தை ஒருபோதும் கொடுக்க நான் விரும்பவில்லை," என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர்தான் ஜெசிந்தா.
வாழ்த்துங்கள்
ஜசிந்தா ஆர்டெர்ன், 2017ம் ஆண்டு ஆகஸ்டில் நியூசிலாந்து லேபர் கட்சியின் தலைவரானார், பின்னர் அக்டோபர் மாதத்தில், அதாவது வெறும் 3 மாதங்களில் தனது 37வது வயதில் அவர் பிரதமர் பொறுப்புக்கு வந்தவர். மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரியது. அதுதான் ஜெசிந்தா. கொரோனா இல்லாத முதல் பெரிய நாடு என்ற அந்தஸ்தை நியூசிலாந்துக்கு வாங்கிக் கொடுத்தவர் அவர். பிறகு சில கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்தி சிறப்பாக, கட்டுப்படுத்தி அசத்தி வருகிறார் ஜெசிந்தா. இரண்டாவது முறையாக பிரதமராகும் ஜெசிந்தாவுக்கு நாமும், வாழ்த்து தெரிவிக்கலாமே!