இதெல்லாம் சரிப்பட்டு வராது.. காஷ்மீர் பிரச்சினையில் இதுதான் நடக்க வேண்டும்.. பாக். அமைச்சர்
Recommended Video
இஸ்லாமாபாத்: 3-ஆவது நாடு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு கடந்த மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இதை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இந்தியா திரும்ப பெற்றுவிடும் என அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுவிட்டது. இதற்காக உலக நாடுகளிடம் ஆதரவு கோரியது.
பாகிஸ்தான் ஏமாற்றம்
ஆனால் எல்லா நாடுகளும் இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என கூறிவிட்டன. இதையடுத்து சீனாவுடன் இணைந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலையும் பாகிஸ்தான் அணுகியது. ஆனால் அங்கிருந்தும் ஏறத்தாழ இதே பதில் கிடைத்ததால் பாகிஸ்தான் ஏமாற்றமடைந்தது.
பிரச்சினை
இதையடுத்து இந்தியா மீது போர் தொடுக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. பின்னர் தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மாற்றிக் கொண்டார். மேலும் போர் என்றுமே ஒரு பிரச்சினைக்கு தீர்வாகாது என தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள்
ஒவ்வொரு முறையும் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அமைப்புகளிடம் எழுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அந்த முயற்சியை இந்தியா முறியடித்து வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மமூத் குரேஷி கூறுகையில் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு தெரியும்.
நேர்மறையான பதில்கள்
ஆனால் அவர்கள் சில காரணங்களால் இதுகுறித்து அவை குரலெழுப்ப மறுக்கின்றன. காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பல முறை முயற்சித்தோம். ஆனால் அவர்கள் நேர்மறையான பதில்களை தரவில்லை.
தலையீடு
எனவே இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை என்பது சாத்தியம் இல்லை. அதனால் காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்.