தாளாற்றித் தந்த.. திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி.. தாய்லாந்தில் அதிர்ந்த அரங்கம்
பாங்காக்: தாளாற்றித் தந்த.. எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி, தாய்லாந்தில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 6.15 மணிக்கு துவங்கிய, 'சவஸ்திபிஎம்மோடி' என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும், திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உரையை ஆரம்பித்தபோது, நமது நாட்டின், தமிழ் உள்ளிட்ட, பல்வேறு மொழிகளிலும் மோடி வணக்கம் என்பதை தெரிவித்தார்.
'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்
மேலும் அவர் பேசுகையில், திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்ற மறக்கவில்லை. மோடி உரையில் கூறியதாவது:
60 ஆண்டுகளில் முதல் தடவையாக, இந்தியாவில், ஒரு அரசு முழு பெரும்பான்மையுடன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இப்போதுதான். வாக்களித்த பெண்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு சமமாக உயர்ந்துள்ளது. மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை சுதந்திரத்திற்குப் பின்னர் இப்போதுதான் அதிகமாக உள்ளது.
6-7 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருபவர்கள், அங்கு ஒரு தெளிவான முன்னேற்றத்தைக் காணலாம். நாம் (இந்தியா & தாய்லாந்து) ஒருவருக்கொருவர் மொழியின் அடிப்படையில் மட்டுமல்ல, உணர்வுகளிலும் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நீங்கள் 'சவஸ்தி மோடி' என்று சொன்னீர்கள், இதற்கு சமஸ்கிருத வார்த்தையான 'ஸ்வஸ்தி' என்பதோடு தொடர்பு உள்ளது.
இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவு எந்தவொரு குறிப்பிட்ட அரசாங்கத்தினாலும் அல்ல, இந்த உறவுக்கு எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கிரெடிட் கொடுக்க முடியாது. கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் பகிரப்பட்ட ஒவ்வொரு கணமும் இந்த உறவை உருவாக்கி பலப்படுத்தியுள்ளது.
தமிழ் மொழியின் சிறந்த நூலான திருக்குறள், 'தாய்' மொழிபெயர்ப்பு, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டியாக விளங்கும்.
"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு" என்று புனிதரான திருவள்ளுவர் ஒரு குறளில் தெரிவிக்கிறார்.
இதற்கு அர்த்தம், "ஒப்புரவாளன், தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம், தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்." என்பதுதான்.
இந்தியர்கள் வாழ்க்கை முறையும், இப்படித்தான் இருக்கும். (இவ்வாறு மோடி கூறியதும், அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் கரகோசம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்)
நாங்கள் வெறும் 3 ஆண்டுகளில் 8 கோடி வீடுகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளை வழங்கியுள்ளோம். இந்த எண்ணிக்கை தாய்லாந்தின் மொத்த மக்கள்தொகையை விட பெரியது. உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவின் உற்சாகம் இந்தியர்களிடையே உயிரோடு இருக்கிறது. அதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறது. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.
முன்னதாக, ஐ.நா.சபையில் சமீபத்தில் உரையாற்றியபோது, மோடி, கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை மேற்கோள்காட்டியது குறிப்பிடத்தக்கது.