லண்டனில் களைகட்டிய திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா
லண்டன்: லண்டனில் தமிழர் முன்னேற்ற கழகம் நடத்தும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா கடந்த 18ம் தேதி பிளாசட் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவை த.மு.க. தலைவர் திரு. நாகதேவன் தொடங்கி வைக்க, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தவமணி மனோகரன் ஒருங்கிணைத்தார். இந்த விழாவிற்கு வழக்கறிஞர் திரு. சிதம்பரப்பிள்ளை மற்றும் டாக்டர் திருமதி சிதம்பரப்பிள்ளை ஆகியோர் தலைமை ஏற்று சிறப்பித்தனர்.
தாய்மொழியாம் தமிழ்மொழியை சிறப்பிக்கும் வகையில் செந்தமிழே வணக்கம் என்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மேலும் தமிழுக்காக, தமிழருக்காக தொண்டாற்றிய தியாகிகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, பாட்டு, நடனம், நாடகம், வீணை இசை ஆகிய இனிய கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் ஆண்டுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டன. தொண்டு மனப்பான்மையோடு பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளிக்கு வாரந்தோறும் வருகை தந்து பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிக்கும் மூதாட்டி திருமதி பாலசிங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
சில மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்பதும், கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் பயிற்றுவித்து வருகிறது என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.