தாஜ் மட்டும் அல்ல ஓபராய் ஹோட்டலையும் உளவு பார்த்தேன்: ஹெட்லி
நியூயார்க்: மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்த போட்ட திட்ட விபரங்களை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று தொடர்ந்து 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
உளவு
சித்தி விநாயகர் கோவிலை கண்காணிக்குமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. உளவு பார்க்கையில் நான் பல்வேறு இடங்களையும் கண்காணித்தேன். சிஎஸ்டி, போலீஸ் தலைமை அலுவலகம், ஓபராய் ஹோட்டல், கடற்படை மற்றும் விமானப்படை தளங்களையும் உளவு பார்த்தேன். கொலாபா காவல் நிலையம், லியோபோல்ட் கபே, பல்வேறு கடைகள், ஹோட்டல்களை வீடியோ எடுத்தேன்.
ஜிபிஎஸ்
நான் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தினேன். ஜிபிஎஸ் கருவியில் பல்வேறு இடங்களின் விபரங்களை ஸ்டோர் செய்தேன். ஜிபிஎஸ் கருவியை எனக்கு சஜித் மிர் அளித்தார். அரபுக் கடலோரம் உள்ள சில இடங்களின் விபரங்களையும் சேகரித்தேன்.
மும்பை
2006ம் ஆண்டு நான் மும்பை சென்றபோது பிரீச் கேன்டி மருத்துவமனை அருகே உள்ள பி.ஜி.யில் தங்கினேன். சிஎஸ்டி(சத்ரபதி சிவாஜி ரயில் முனையம்) வழியாக தீவிரவாதிகள் தப்பிப்பது தான் திட்டம். அதை தாக்க முதலில் திட்டமிடவில்லை.
சோனி எரிக்சன்
உளவு பார்க்க போன், ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தினேன். சஜித் மிர் எனக்கு ஜிபிஎஸ் கருவியை அளித்தார். மேஜர் இக்பால் எனக்கு சோனி எரிக்சன் போனை அளித்தார். அந்த இரண்டையும் வைத்து நான் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தேன்.
ஐஎஸ்ஐ
லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு ஆதரவளித்து நிதியுதவி செய்வது ஐஎஸ்ஐ தான். அந்த அமைப்பை ஐஎஸ்ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தாஜ் ஹோட்டல்
தாஜ் ஹோட்டலை தாக்குவது தான் முக்கியமானது. தாக்குதல் நடத்த திட்டமிட்டபோது தாஜ் ஹோட்டலின் மாதிரி வடிவம் செய்யப்பட்டது. அதை வைத்து ஹோட்டலில் எந்தெந்த இடங்களை தாக்குவது என்று திட்டமிடப்பட்டது. எந்த வழியாக ஹோட்டலுக்குள் நுழைவது, எந்த வழியாக வெளியேறுவது என்றும் திட்டமிடப்பட்டது.
ராணுவம்
ஜகியுர் ரஹ்மானின் கையாளான பிரிகேடியர் ரியாஸ் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர். ஐஎஸ்ஐயின் மேஜர் சமீர் அலியை நான் சந்தித்துள்ளேன். நான் ஐஎஸ்ஐக்காக வேலை செய்தபோது பலரை சந்தித்துள்ளேன்.