'அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கை ஏவி ஒடுக்குவதற்கு இது இந்தியா அல்ல'.. பாக். தலைமை நீதிபதி பேச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போராடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது குறித்து விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதர் மினால்லா 'அனைவரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அரசை விமர்சிப்பவர்கள் மீதுதேசத்துரோக வழக்கை ஏவி ஒடுக்குவதற்கு இது இந்தியா அல்ல' என்றார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதர் மினால்லா, அந்நாட்டில் சிலர் மீது பாகிஸ்தான் அரசு போட்ட தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் தொடர்பான வழக்குகள் குறித்து திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி அதர் மினால்லா, இந்தியாவைப் பற்றி பேசினார் ஜனநாயகம் நாடு என்ற போதிலும் இந்திய அரசு எதிர்ப்பாளர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகளுக்கு நிற்காத நிதி உதவி.. விளாசும் FATF.. பிளாக் லிஸ்டுக்கு போகிறதா பாகிஸ்தான்?
இது இந்தியா அல்ல
"இங்கு ஒவ்வொருவரின் அரசியலமைப்பு உரிமைகளும் பாதுகாக்கப்படும். இது பாகிஸ்தான், இந்தியா அல்ல, "என்று நீதிபதி மினல்லா நீதிமன்றத்தில் கூறியதாக கூறப்படுகிறது. பி.டி.எம் தலைவரும் பிரபல மனித உரிமை ஆர்வலருமான மன்சூர் பாஷ்டீனை பாகிஸ்தான் போலீஸ் கடந்த மாதம் கைது செய்ததது.
தேசதுரோக வழக்கு
இதை எதிர்த்து அவாமி தொழிலாளர் கட்சி (ஏ.டபிள்யூ.பி) மற்றும் பஷ்டூன் தஹாபுஸ் இயக்கம் (பி.டி.எம்) ஆகிய இயக்கங்களை சேர்ந்த 23 பேர் இஸ்லாமாபாத்தில் ஜனவரி 28ம் தேதி போராட்டம் நடத்தினார். இவர்களை அனைவரையும் இஸ்லாமாபாத் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தேசதுரோகம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக வழக்கு போட்டது.
வழக்குகள் ரத்து
இவர்கள் அனைவரும் இஸ்லாமபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி அதர் மினால்லா விசாரித்தார். அப்போது ஸ்லாமாபாத் இணை கமிஷ்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றம்சாட்டப்பட்டர்கள் மீது தேசதுரோகம் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரசு திரும்பபெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் நடத்திய 23 பேரையும் ஜாமினில் விடுவிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
உரிமைகள் பாதுகாக்கப்படும்
இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறுகையில், ஒரு ஜனநாயக அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தால் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைகள் வைக்க முடியாது. (நாங்கள்) விமர்சனத்திற்கு அஞ்சக்கூடாது. அரசியல் அமைப்பு நீதிமன்றங்கள் மக்களின் அரசியல் அடிப்படைப்படை உரிமைகளை பாதுகாக்கும். இந்த நாட்டில் ஒவ்வொருவரின் அரசியலமைப்பு உரிமைகளும் நிச்சயம் பாதுகாக்கப்படும். ஏனெனில் இது பாகிஸ்தான், இந்தியா அல்ல. " இவ்வாறு கூறினார்.