செவ்வாய் கிரகத்தை ஆராயப் போய் மூளை டயர்ட் ஆகிப் போனதுதான் மிச்சம் இவர்களுக்கு!
மாஸ்கோ: செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆராய்ச்சி செய்வதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட விண்வெளிவீரர்கள் மன அழுத்தத்திற்கும், வெறுமையான மனநிலைக்கும் தள்ளப்பட்டதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியில் இருந்து சுமார் 140 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்தக் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கடந்த 2010ம் ஆண்டு ஆறு விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அருகே உள்ள இடத்தில் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர்.
விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்த 6 பேரும் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர்.
சோதனைகள்...
அப்போது ஒவ்வொரு 60 நாட்களுக்கு ஒருமுறையும் அந்த வீரர்களுக்கு இ இ ஜி பரிசோதனை, எச்சில் பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் அவர்களின் உடல்நிலை மற்றும் மூளையின் செயல்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டது.
மன அழுத்தம்...
இந்தக் காலகட்டத்தில் அந்த வீரர்களின் மனநிலை குறித்தும் ஆராயப் பட்டது. அதில், நீண்ட காலமாக தனிமையில் வசித்ததால், அந்த வீரர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது தெரிய வந்தது. ஆனால், இந்த மன அழுத்தத்தின் பாதிப்பு தற்காலிகமாகவே இருந்துள்ளது. இதனால், விண்வெளி வீரர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
பயிற்சிகள்...
ஆனபோதும் செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப் போகும் விண்வெளி வீரர்களுக்கு, நிச்சயமாக அந்தப் பயணம் வெறுமையானதாக, தனிமை காரணமாக மன அழுத்தத்தைத் தருவதாக அமையும் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், சில பயிற்சிகள் மூலம் தங்களைத் தாங்களே வீரர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் நோக்கம்...
செவ்வாய் கிரகத்தில் யாருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்வோருக்கு நிச்சயம் அது மிகுந்த போரடிக்கும் சமாச்சாரமாக மட்டுமல்லாமல் பைத்தியம் பிடித்தும் விடும் நிலையும் கூட மனோரீதியாக ஏற்படும் என்பதே இந்த ஆய்வின் சாராம்சமாக உணரப்பட்டுள்ளது.
மார்ஸ்500...
இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆறு விண்வெளி வீரர்களுமே தாங்களே முன்வந்து இந்த சோதனைக்கு உட்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக்கு மார்ஸ் 500 என்பது பெயராகும்.
ஆறுதல்...
தற்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என்பது தெரிய வந்துள்ளதால், ஒரு நாளையே மனிதன் அங்கு போனாலும் கூட தோட்டம் போட்டு பாத்தி கட்டி பாசனம் செய்து பொழுது போக்க ஒரு வழி ஏற்பட்டுள்ளது என்று ஆறுதல் கொள்ளலாம்.