ஆட்டிசம் பாதித்த மகனையும், மனைவியையும் கூண்டில் அடைத்து கட்டி வைத்த கொடூர நபர்
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனை கயிறால் கட்டிப் போட்டு கூண்டுக்குள் அடைத்து நாய்க்கு அளிக்கும் உணவை அளித்து வந்துள்ளார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் எட்வர்டோ ஓவீடோ(66). கட்டுமானத் தொழிலாளி. அவர் மார் டெல் பிளாட்டாவில் கடற்கரை அருகே வசித்து வந்துள்ளார். அவர் தனது 61 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 32 வயது மகனை கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளார். ஆண்டுக்கணக்கில் அவர்களை கூண்டுக்குள் அடைத்து நாய்க்கு அளிக்கும் உணவை அளித்து வந்துள்ளார். அவர்கள் இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து எட்வர்டோவின் உறவினர்கள் சிலர் போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் எட்வர்டோவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியபோது அந்த கூண்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கூண்டிற்கு கைகள் கட்டிய நிலையில் நாய் உணவு, ஊசி, கேன்கள், பூட்டுகள், செயின், மனித கழிவு ஆகியவற்றுடன் தாயும், மகனும் இருந்த பரிதாப நிலையை பார்த்து போலீசார் அதிர்ந்துவிட்டனர். அவர்கள் இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதே பகுதியில் வசிக்கும் எட்வர்டோவின் பிற பிள்ளைகள் அவருக்கு பயந்து கொண்டு இத்தனை ஆண்டுகளாக இது பற்றி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். மனைவி, மகனை கொடுமைப்படுத்திய வழக்கில் எட்வர்டோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
எட்வர்டோ தனது மனைவி, மகனை எத்தனை ஆண்டுகளாக இப்படி அடைத்து வைத்திருந்தார் என தெரியவில்லை.