பேஸ்புக் மூலம் பெண்களை மிரட்டி வந்த "டுபாக்கூர் டைகர் மேமன்" கைது... !
கராச்சி: கராச்சியில் டைகர் மேமன் என்ற பெயரில் பேஸ்புக்கில் பெண்களுக்கு மிரட்டலும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்த புர்க்கான் அலி என்ற நபரை கராச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி டைகர் மேமன் பெயரைப் பயன்படுத்தி இந்த நபர் பெண்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல்கள், புகார்கள் வந்தன.
இதையடுத்து இந்த நபர் யார் எங்கிருந்து செயல்படுகிறார் என்பதை போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். கராச்சியில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரிலிருந்து இவர் பேஸ்புக் மூலமாக பெண்களைத் தொடர்பு கொண்டு தொல்லை கொடுப்பதை போலீஸார் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட மையத்தை முற்றுகையிட்டு ரெய்டு நடத்தியபோது இந்த புர்க்கான் அலி சிக்கினார்.
அவரிடம் விசாரித்தபோது டைகர் மேமன் என்ற பெயரில் செயல்பட்டது தான்தான் என்பதை ஒத்துக் கொண்டார். முதலில் டைகர் மேமன் கைது என்று பாகிஸ்தானில் செய்தி பரவவே பரபரப்பாகி விட்டது. கடைசியில்தான் டைகர் மேமன் பெயரைப் பயன்படுத்தி சில்மிஷம் செய்த நபர் கைது என்ற விவரம் தெரிய வந்து மக்களிடம் பதட்டம் குறைந்ததாம்.
ஒரிஜினல் டைகர் மேமன் இந்தியாவைச் சேர்ந்தவர். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கியப் புள்ளி. இவரும் தாவூத் இப்ராகிமைப் போலவே பாகிஸ்தானில் தான் பதுங்கியுள்ளார். இவரது தம்பி யாக்கூப் மேமனைத்தான் சமீபத்தில் இந்த வழக்கில் இந்திய அரது தூக்கிலிட்டது என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 1996ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானிலிருந்துதான் பதுங்க வாழ்கிறான் டைகர் மேமன் என்பது குறிப்பிடத்தக்கது.