"மெடிக்கல் மிராக்கிள்"... போன வருஷம் ரூ. 30,000 கோடி சொத்துக்கு அதிபதி.. இப்ப போண்டி!
லண்டன்: எலிசபெத் ஹோம்ஸ்.. நேற்று வரை ரூ. 30,000 கோடி சொத்துடன் பெரிய கோடீஸ்வரியாக வலம் வந்தவர். ஆனால் இனறு அவரது சொத்து "முட்டை"!.. நயா பைசா மதிப்பில்லாதவராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஹோம்ஸ்.
தெரானோஸ் ஐஎன்சி என்ற ரத்த பரிசோதனை நிறுவனத்தை நிறுவியவர் எலிசபெத். கடந்த ஆண்டு இவருக்கு ரூ. 30,000 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக போர்ப்ஸ் பட்டியலிட்டிருந்தது. ஆனால் தற்போது அவரது சொத்துக்களுக்கு மதிப்பே இல்லை என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.
இவரது நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்களும் உள்ளன. அதில் பல முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்க அரசுக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இவரது நிறுவனங்களை கண்காணித்து வந்தன. விசாரணையும் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் எலிசபெத் மீது மோசடியான ரத்த பரிசோதனைகளை நடத்தி நோயாளிகளை ஏமாற்றியதாக வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து அவரது நிறுவன பங்குகள் அடியோடு சரிந்தன. மேலும் அவர் தனது சொத்துக்களின் மதிப்பையும் போலியாக கூட்டிக் காட்டியிருந்தார். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த போர்ப்ஸ், அவரது சொத்துக்களுக்கு ஒரு பைசா மதிப்பு கூட இல்லை என்று கூறி விட்டது.
கடந்த 2015ம் ஆண்டுதான் எலிசபெத்தை போர்ப்ஸ் வெகுவாக பாராட்டி எழுதியிருந்தது. அவரது சொத்து மதிப்பு ரூ. 30,000 கோடி என்றும் அது கணக்கிட்டிருந்தது.
கடந்த 2003ம் ஆண்டு தெரானோஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடங்கிய வேகத்திலேயே அது வேகமாக வளரவும் ஆரம்பித்தது. ரத்த பரிசோதனை தொடர்பாக பல்வேறு புதிய முறைகளை அது அறிவித்ததால் மக்கள் மத்தியிலும் பிரபலமானது.
ஆனால் அந்த நிறுவனம் பயன்படுத்திய ரத்த பரிசோதனை சாதனங்களும், ரத்த பரிசோதனைகளும் பெரும் மோசடி என்று பின்னர் செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதனால் புகழ் உச்சியிலிருந்து சரிந்து விழுந்தது தெரானோஸ்.