திருவிழாவில் கொல்லப்பட இருந்த 100 நாய்களைக் காப்பாற்றிய ”தெய்வத் தாய்”
யூலின்: சீனாவில் யூலின் நகரில் நாய்க்கறி திருவிழாவில் விருந்தாக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை மீட்பதற்காக சுமார் 2400 கிலோ மீட்டர் பயணித்துவந்து, ஆயிரம் அமெரிக்க டாலர்களை தந்து 100 நாய்களின் உயிரை காப்பாற்றிய 65 வயது சீனப்பெண் மனிதநேயமும், பிராணிகள் மீதான மனிதர்களின் பாசமும் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.
சீனாவின் குவாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய் இறைச்சி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோடைக் காலத் திருவிழாவாக கொண்டாடப்படும் இவ்விழாவின் போது, சமைத்த நாய் இறைச்சியை லெச்சி எனப்படும் உணவுடன் சேர்த்து உண்டு மகிழ்வது சீன மக்களின் பாரம்பரிய மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
சீனர்கள் நாய் இறைச்சி உண்பது என்பது சர்வ சகஜமானதுதான். எனினும், இந்த விழாவின் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதால், இவ்விழாவுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி அங்கு நாய் இறைச்சி கடைகள் களைகட்டி வருகிறது.
இதற்காக அங்குள்ள இறைச்சிக்கடைகளில் ஏராளமான கூண்டுகளில் நாய்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் தெருநாய்கள் மற்றும் பல வீடுகளில் இருந்து திருடி வரப்பட்ட வளர்ப்பு நாய்கள் ஆகும். இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் நாய்கள் வரை இறைச்சிக்காக வெட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தடுக்கும் வகையில் அங்குள்ள தன்னார்வ தொண்டர்கள் யூலின் நகர கடைகளில் வைக்கப்பட்டுள்ள நாய்கள் மற்றும் பூனைளை மீட்டு வருகின்றனர்.
டியான்ஜின் நகரை சேர்ந்த யாங் சியாயுன் என்ற வயதான பெண் மட்டும், ஆயிரம் அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் ரூபாய் 65 ஆயிரம் ரூபாயை நாய் வியாபாரிகளுக்கு அள்ளித்தந்து அவர்கள் கூண்டுகளில் போட்டு அடைத்து வைத்திருந்த 100 நாய்களை மீட்டுச்சென்றுள்ளார்.
இந்த நாய்களை மீட்பதற்காக டியாஞ்சின் நகரைச் சேர்ந்த யாங் க்சியாவ்யுன் என்ற அந்தப் பெண்மணி சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்து யூலின் நகருக்கு வந்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.