“தனியே தன்னந்தனியே.. ராணி மாதிரி..” பிலிப்பைன்ஸ் இளம்பெண்ணிற்கு அடித்த ஜாக்பாட்!
எதிர்பாராதவிதமாக பிலிப்பைன்ஸ் இளம்பெண் ஒருவருக்கு விமானத்தில் தனி ஆளாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, விமானத்தில் தனி ஆளாக பயணிக்கும் அதிர்ஷ்டம் எதிர்பாராதவிதமாக கிடைத்துள்ளது.
பெரும் கோடீஸ்வரர்கள் நினைத்த இடத்திற்கு தனி விமானத்தில் பறந்து செல்வதை அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக கேள்விப் பட்டிருப்போம். நாமும் அதுபோல் செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு நம்மிள் பலருக்கு நிச்சயம் இருக்கும். ஆனால், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்வதே பெரும் கனவாக இருப்பவர்களுக்கு இத்தகைய ஆசைகள் எப்போதும் எட்டாக்கனிகள் தான்.
ஆனால், எதிர்பாராதவிதமாக இத்தகைய அதிர்ஷ்டம் ஒருவருக்கு அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படியான தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பற்றி பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
லுசியா:
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் லுசியா. இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி டவோவில் இருந்து மணிலாவிற்கு விமானத்தில் செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளார். அன்றைய தினம் விமானத்தில் ஏறியவருக்கு பெரும் இன்பதிர்ச்சி.
ராஜ உபச்சாரம்:
காரணம் விமானத்தில் அவரைத் தவிர வேறு பயணிகளே இல்லை. லுசியாவும் விமான ஊழியர்களும் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர். இதனால் அப்பயணம் முழுவதும் தனியொரு பயணியாக, விமான ஊழியர்களின் ராஜ உபச்சாரத்தோடு பயணம் செய்திருக்கிறார் லுசியா.
கொடுத்து வைத்தவர்:
இது தொடர்பான புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ‘இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடாது. இந்த மாதிரியான பயணத்திற்கு நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என லுசியாவின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவனத்திற்கும் பாராட்டு:
அதோடு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். ஒரே ஒரு பயணி மட்டுமே அந்த விமானத்தில் பறக்க இருக்கிறார் என்பது தெரிந்தும், அவர்கள் விமானத்தை இயக்கியதற்குத் தான் அந்தப் பாராட்டு. அவர்கள் நினைத்திருந்தால், லுசியா செலுத்திய விமானக் கட்டணத்தைவிட அதிக பணத்தை திருப்பிக் கொடுத்து, அவரது டிக்கெட்டை ரத்து செய்யவோ அல்லது அவரது டிக்கெட்டை வேறு விமானத்திலோ மாற்றி விட்டிருக்க முடியும்.
நெட்டிசன்கள் பாராட்டு:
தனி ஒரு பயணிக்காக ஒரு விமானத்தை இயக்கியதைவிட அது செலவு குறைந்ததாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் ஒரு பயணியாக இருந்தாலும், அவரை மதித்து அவரது பயணத்திற்காக விமான ஊழியர்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி, சுகமான பயணம் மேற்கொள்ளச் செய்ததை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.