ஆண்டுதோறும் ஊசி போட வழியில்லாமல் ரேபிஸால் இறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்
வாஷிங்டன்: ரேபிஸ் தடுப்பூசி போட போதுமான நிதியின்மையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நாய்கடிக்கு பலியாவதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில் ரேபிஸ் நோயால் உயிரிழக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களில் பாதியளவினர், அதாவது 55,000 பேர் சிறுவர்களே என்று பிராணிகள் நலன்களுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் ஏற்பட்டுள்ள நாய்களின் மூலமே சிறுவர்களுக்கு இந்தக் கொடிய நோய் பரவுகிறது என்று அந்த அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
மிகக் குறைந்த அளவு நிதியாதாரங்கள் இருந்தாலே ரேபிஸ் நோயை முழுவதுமாக ஒழித்துவிட முடியும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் பெர்ணார்ட் வாலட் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரேபிஸ் தடுப்பூசியைப் போட முடியாமல் போவதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பரிதாபமாக மரணத்தைச் சந்திக்கிறார்களாம்.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணமடையச் செய்யும் மருத்துவச் செலவைவிட, நோயை ஒழிப்பதற்கான செலவு மிகவும் குறைவு. ஆனால் ரேபிஸ் நோய் ஒழிப்பை முன்னுரிமையாக சர்வதேச கொடையாளி அமைப்புகள் எடுத்துக் கொள்வதில்லை எனவும் டாக்டர் வால்ட் வருந்தியுள்ளார்.