தியேட்டர்கள் இனி அவ்வளவுதான்.. இழுத்து மூட வேண்டியதுதான்.. சீனாவில் புதிய கவலை
பெய்ஜிங்: சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களை மீண்டும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவைரஸ் லாக்டவுன் காரணமாக அந்த அளவுக்கு தியேட்டர்கள் அங்கு மீண்டு வர முடியாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளனவாம்.
Recommended Video
இதுதொடர்பாக திரைத்துறையினர் நடத்திய சர்வேயில் கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களை திறக்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளதாம். இதனால் தொழிலாளர்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனராம்.
மக்கள் தொகையில் மட்டுமல்ல, உலகிலேயே சீனாவில்தான் தியேட்டர்களும் அதிகம். இங்கு கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனாவைரஸ் வெறியாட்டம் போட ஆரம்பித்தது சீனாவிலிருந்துதான். குறிப்பாக வூஹான் நகரிலிருந்து கிளம்பிய இந்த வைரஸ் இன்று உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளது.
ரோடு போடும் கூலி வேலை கிடைச்சாலும் பரவாயில்லை.. உ.பி. பட்டதாரிகளின் பரிதாப நிலை!
தியேட்டர்களுக்குப் பாதிப்பு
இந்த நிலையில் தற்போது தியேட்டர்களுக்கு மிகப் பெரிய இழப்பு, அதுவும் மீண்டு வர முடியாத அளவுக்கு பேரிழப்பை சந்தித்துள்ளன தியேட்டர்கள். சீனாவில் கிட்டத்தட்ட 69,787 திரைகள் உள்ளன. உலக அளவில் மிகப் பெரிய திரைத்துறை அமெரிக்காதான். அடுத்த பெரிய திரைத்துறை சீனா. இப்படிப்பட்ட நாட்டில் கடந்த பல மாதங்களாக தியேட்டர்களை மூடி வைத்திருப்பதால் அந்தத் துறையே கிட்டத்தட்ட அழிந்து போய் விட்டது.
ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு
பல்லாயிரக்கணக்கான தியேட்டர் ஊழியர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நிற்கின்றனர். கிட்டத்தட்ட 4.24 பில்லியன் டாலர் இழப்பை திரைத்துறை சந்தித்துள்ளதாம். இந்திய மதிப்புப் படி இது கிட்டத்தட்ட 32 கோடியாகும். இந்த நிலையில் மீண்டும் தியேட்டர்களை திறக்க முடியுமா, தியேட்டர்கள் என்ன நிலையில் உள்ளன என்பது குறித்த விவரம் அறிய ஒரு சர்வே நடத்தப்பட்டது.
40% தியேட்டர்கள் காலி
சீன திரைப்பட சங்கம் மற்றும் சீன திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த சர்வேயை நடத்தின. அதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளனவாம். அதாவது கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் மேலான தியேட்டர்களை இயக்கவே முடியாத அளவுக்கு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனவாம். இவை நிரந்தரமாக மூடப்படும் நிலையில் உள்ளனவாம்.
பெரும் நஷ்டம்
அதாவது கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான தியேட்டர்களை திறக்கவே முடியாது. அந்த தியேட்டர்களில் பணியாற்றிய அனைவருமே வேலையை இழந்து விட்டனர். மீண்டும் இந்த தியேட்டர்களை திறக்க முடியாத அளவுக்கு பெரும் நஷ்டத்தை அவை சந்தித்துள்ளன என்று தெரிய வந்துள்ளது. கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் நிபந்தனைகளுடன் தியேட்டர்களை திறக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மிக மிக கடினம்
குறைந்த இருக்கைகள் போடப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் பின்பும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் எவையும் இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளன. சில தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதிலும் கூட புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த காரணத்தால் அவையும் பின்னர் மூடப்பட்டு விட்டன. கொரோனா முற்றிலும் ஒழியாத வரை தியேட்டர்களை திறப்பது என்பது மிக மிக கடினம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊழியர்களுக்கு வேலை இல்லை
நீண்ட காலமாக தியேட்டர்களை மூடியே வைத்திருப்பதால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தியேட்டர் ஊழியர்கள்தான். அவர்களில் பலரும் வேலைகளை இழந்து விட்டனர். சில தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் அவர்களை வேலைக்கு வைத்துள்ளனர். தியேட்டர்களை பராமரிப்பதற்காக அவர்களே வேலையில் வைத்துள்ளனர். ஆனாலும் சம்பளம் அடியோடு குறைக்கப்பட்டு விட்டதாம்.
10% தியேட்டர்கள் ஓகே
மார்ச் மாத இறுதியில் 20 சதவீத தியேட்டர்களில் ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இவர்களில் பலரும் சிறிய மற்றும் நடுத்தர தியேட்டர்களில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர். 42 சதவீத தியேட்டர்கள் மீண்டும் இயங்க முடியாத அளவுக்கு உள்ளதாம். 10 சதவீத தியேட்டர்கள்தான் மீண்டும் இயங்கக் கூடிய வகையில் உள்ளனவாம்.
6 மாதம் முதல் ஒரு வருடமாகும்
தியேட்டர்கள் முழு வீச்சில் திறக்கப்பட்டாலும் கூட அவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது 6 மாதங்களாகும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகின்றனர். அதுவே 37 சதவீத தியேட்டர் உரிமையாளர்கள், தாங்கள் மீண்டு வர ஒரு வருடமாகும் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் நிலையே இப்படி என்றால் தமிழகத்தின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதில் இன்னும் அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.