ஜப்பானின் தொழில்நகரம் ஒசாகாவில் பயங்கர நிலநடுக்கம்.. ஹோண்டா, டொயோட்டா ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு
Recommended Video
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமர் ஷின்சோ அபே, கூறுகையில், அதிகாரிகள் சேதத்தை மதிப்பிடுவதாகவும், மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரப்படுவதாகவும் தெரிவித்தார்.
பூகம்பத்தின் மையப்பகுதி என்பது ஒசாகா நகரத்திற்கு சற்றே வடக்கே இருந்தது என ஜப்பானின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. முதலில் 5.9 ரிக்டர் என கூறப்பட்டது. பின்னர் அதை 6.1 ஆக உயர்த்தியது ஆய்வு மையம்.
இந்த நிலநடுக்கம் மத்திய ஜப்பானின் முக்கிய தொழில்துறை நகரத்தில் ஏற்பட்டுள்ளது என்பதால், பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஒசாகாவில் இருந்து இயங்கி வரும் பானசோனிக் நிறுவனம் அதன் இரண்டு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான டைஹாட்சு மோட்டார் நிறுவனம், ஒசாக்கா மற்றும் கியோட்டோ ஆகிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் சேதத்தை சரிபார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதுவரை உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் கூறியது.
ஹோண்டா மோட்டார் கம்பெனி, அருகிலுள்ள சுசுகாவில் ஆலையை நடத்தி வருகிறது. பூகம்பத்திற்கு பிறகு சோதனைக்காக ஆலை பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை அறிந்த பிறகு ஆலை நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
3 dead, dozens injured as 6.1 quake hits #Japanhttps://t.co/ckGXKXl5BT #japanearthquake #japanquake pic.twitter.com/kHcM4vhCuI
— rediff (@RediffNews) June 18, 2018
2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி, வடகிழக்கு ஜப்பானில் அதிகபட்சமாக 9.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அப்போது சுனாமி அலைகள் எழுந்தன. 18,000 மக்கள் அதில் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஃபுகுஷிமா அணுசக்தி நிலையத்தில், சமீபகாலத்தில் உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவை அந்த நிலநடுக்கம் ஏற்படுத்தியது.