அலுவலகத்தில் ஆபாசப் படம் பார்த்த 3 மூத்த இங்கிலாந்து நீதிபதிகள் டிஸ்மிஸ்: ஒருவர் ராஜினாமா
லண்டன்: அலுவலக கம்ப்யூட்டரில் பணி நேரத்தில் இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த 3 மூத்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து உச்சநீதிமன்ற உயர் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில் அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து தங்களது பணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தவாறு இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுலெஸ், குடியுரிமைத்துறை நீதிபதி வாரென் கிராண்ட், மாவட்ட துணை நீதிபதி மற்றும் பதிவாளரான பேட்டர் புல்லக் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டன் நாட்டு நீதித்துறை சட்டங்களின்படி, இவர்களின் செயல்பாடு மன்னிக்கத்தக்கது அல்ல. எனவே, இவர்களை பதவி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என அந்நாட்டின் உயர் நீதிபதியான லார்ட் சான்செலர் குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது நீதிபதியான ஆண்ட்ரு மா என்பவர் இந்த விசாரணை முடியும் தருவாயில் தாமாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.