ஏர்பஸ் விமானம்: 3 விபத்துகளில் 499 பேர் பலி- ஒரு 'ஷாக் ரிப்போர்ட்'
பாரீஸ்: 15 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருந்து 150 பேருடன் ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு கிளம்பிய ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானம் பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியுள்ளனர். மேலும் மீட்கப்பட்டுள்ள விமானத்தின் கருப்பு பெட்டி சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
15 ஆண்டுகள்
15 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் மண்ணில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முன்னதாக 2000ம் ஆண்டு கான்கார்ட் விமானம் பிரான்ஸில் விபத்துக்குள்ளானது.
ஏர் பிரான்ஸ்
ஏர் பிரான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கன்கார்ட் ரக விமானம் 4590 பிரான்ஸில் இருந்து நியூயார்க் நகருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி கிளம்பியது. அந்த விமானம் பிரான்ஸின் கொனீஸ் நகரில் விபத்துக்குள்ளாகி ஹோட்டல் ஒன்றின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 109 பேரும், தரையில் இருந்த 4 பேரும் என மொத்தம் 113 பேர் பலியாகினர்.
ஜெர்மன்விங்ஸ்
செவ்வாய்க்கிழமை ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது ஏர்பஸ் ஏ320 ரக விமானம் ஆகும். இந்த ரக விமானம் மோசமாக விபத்துக்குள்ளானது இது மூன்றாவது முறை ஆகும்.
ஏர்பஸ் 320
2007ம் ஆண்டு பிரேசிலைச் சேர்ந்த டாம் லின்ஹாஸ் ஏரியஸ் நிறுவனம் இயக்கிய ஏர்பஸ் ஏ320 விமானம் பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் இருந்த 187 பேர் பலியாகினர்.
ஏர்ஏசியா
ஏர் ஏசியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பியது. அந்த விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இதில் விமானத்தில் இருந்த 162 பேர் பலியாகினர்.