அமெரிக்க தியேட்டருக்குள் சரமாரி துப்பாக்கி சூடு.. 3 பேர் சாவு, 7 பேர் படுகாயம்
நியூயார்க்: அமெரிக்காவில் திரையரங்கத்தில் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர், 7 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் ஜான்ஸ்ட்டன் பகுதியிலுள்ளது, தி கிராண்ட் என்ற திரையரங்கம். அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில், அந்த தியேட்டரில் Train Wreck என்ற திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு நபர், தனது துப்பாக்கியால் ரசிகர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதனால் தியேட்டரில் மரண ஓலம் எதிரொலித்தது. பலரும் சீட்டுக்கு அடியில் பதுங்கி பதைபதைப்புடன் நடப்பதை கேட்டுக்கொண்டிருந்தனர்.
சிலர் செல்போன் வாயிலாக காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தியேட்டரை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தனர். அப்போது 2 பேர் உயிரிழந்து கிடப்பதும், 8 பேர் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காயமடைந்தோரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதில் துப்பாக்கி சூடு நடத்தியவனும் ஒருவன். இதுவரை உயிரிழந்தோர் பெயர்கள் வெளியிடப்படவில்லை. துப்பாக்கியால் சுட்ட நபர், வெள்ளை தோலுடன், அமெரிக்கவாசி போலத்தான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.