அமெரிக்கா: மாளிகையில் வைத்து பாலியல் தொல்லை.. சவுதி இளவரசர் மீது 3 பெண்கள் புகார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் மேன்சன் சொகுசு பங்களாவில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது மூன்று பணிப்பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
இந்த மாளிகையில், அமெரிக்காவுக்கு வரும் வேளைகளில் சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தங்குவது வழக்கம். இந்திய மதிப்புக்கு சுமார் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில், பலத்த பாதுகாப்புடன் பிரமாண்டமான மதில் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் இவரது பங்களாவில் இருந்து இளம்பெண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் தப்பிக்க முயன்றதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சவுதி இளவரசர் சட்ட விரோதமாக அடைத்து வைத்து துன்புறுத்தி, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு கட்டாயப்படுத்தியதாக அப்பெண் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மஜித் அப்துல் கைது செய்யப்பட்டார். ஒரு நாள் இரவு முழுக்க போலீஸ் காவலில் இருந்த அவர், பின்னர் 3 லட்சம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 95 லட்சம்) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது மஜித் அப்துல் மீது அவரது பணிப்பெண்கள் மேலும் மூவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இப்பெண்கள் குறித்த விபரங்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை. இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் மஜித் அப்துல்லால் பணிப்பெண்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்.
போலீசாரிடம் அப்பெண்கள் அளித்துள்ள புகாரில், மஜித் அப்துல் தங்களை நிர்வாணப்படுத்தி வேடிக்கை பார்த்ததாகவும், தன் உடல் முழுவதையும் நாக்கால் தடவி சுத்தப்படுத்தச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு மூன்று நாட்கள் தங்களை அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பெண்களின் சார்பாக ஆஜரான வக்கீல், ‘சவுதி இளவரசர் இது போன்று மேலும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்' தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இளவரசர் மீதான புகார்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாதால் அவர் மீதான வழக்கு உறுதியாக இல்லை என்று கூறப்படுகிறது.