விளையாட்டு வினையானது... நிஜதுப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் விளையாட்டுத் துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் தாயை 3 வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹ்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரை சேர்ந்த ராணுவ அதிகாரி கிறிஸ்டா ஏஞ்சல்ஸ் (26). இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று தனது மகளுக்கு டயாபர் மாற்றிக் கொண்டிருந்தார் ஏஞ்சல்ஸ். அப்போது அங்கே வந்த அவரது 3 வயது மகன், தனது கையில் வைத்திருந்த நிஜ துப்பாக்கியால் விளையாட்டுத்தனமாக தாயாரின் தலையில் சுட்டுள்ளான்.
இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஏஞ்சல்ஸ் உயிரிழந்தார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, ஏஞ்சல்ஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், நடந்த விபரீதம் அறியாமல் அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தார் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக அமெரிக்காவில் இது போன்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.