சவூதியில் சித்திரவதைக்குள்ளான 3 கேரள இளைஞர்கள் மீட்பு... சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
துபாய்: சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிறுவன முதலாளியால் சித்திரவதைக்கு ஆளான கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அங்குள்ள எஜென்சி மூலமாக துபாய்க்கு வேலைக்குச் சென்றனர். துபாயில் அவர்களுக்கு வேலை எதுவும் கொடுக்காமல் அவர்களை ஒரு பூட்டிய அறைக்குள் வைத்து ஒருவர் மரக்கட்டையால் கொடூரமாக அடிக்கும் வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மூன்று இந்தியர்களையும் மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், " துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மூன்று இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், அவர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள் " என்று தெரிவித்துள்ளார்.
வெளி நாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் இந்தியர்கள் இது போன்று மாட்டிக்கொண்டு துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம், விமானப் பணிப்பெண் வேலைக்காக துபாய் சென்ற ஒரு பெண் ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொண்டு, பிறகு மீட்கப்பட்டார். அதேபோல இம்மாத துவக்கத்த்ல் வேலைக்காக மலேசியா சென்று சமூக விரோத கும்பலிடம் சிக்கிக் கொண்ட 14 இந்தியர்கள் , பிறகு மீட்கப்பட்டனர்.