2014ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான்: டைம் பத்திரிக்கை
நியூயார்க்: 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
2014ம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலமும் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,
யாருமே முதல் முறையில் செவ்வாய்க்கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா தோல்வி அடைந்தது. ஆனால் செப்டம்பர் 24ம் தேதி இந்தியா அதை சாத்தியமாக்கியது. அன்று தான் மங்கள்யான் செவ்வாய்கிரகத்திற்குள் நுழைந்தது. வேறு எந்த ஆசிய நாடுகளாலும் செய்ய முடியாத சாதனையை இந்தியா செய்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம் பட்டியலில் 2 இந்தியர்களின் கண்டுபிடிப்புகளும் இடம்பிடித்துள்ளன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்கொலை செய்வதை தடுக்க ப்ளூ ரூமை ஒரு இந்திய பெண் கண்டுபிடித்துள்ளார். நளினி நத்கர்னி என்னும் கல்லூரி பேராசிரியை அமெரிக்காவின் ஆரிகனில் உள்ள ஸ்னேக் ரிவர் கரெக்ஷனல் மையத்துடன் சேர்ந்து ப்ளூ ரூமை அமைத்தார். கைதிகள் 24 மணிநேரமும் வெள்ளை சுவரை பார்ப்பதற்கு பதில் அவர்களுக்கு ப்ளூ ரூமில் பாலைவனம், நீர்வீழ்ச்சி, வெளி உலகம் ஆகியவற்றின் வீடியோக்கள் போட்டு காண்பிக்கப்படுகின்றன.
முன்னாள் கூகுள் என்ஜினியர் பிரமோத் சர்மா ஆஸ்மோ என்ற டேப்லெட் பொம்மையை கண்டுபிடித்துள்ளார். அவரது மகள் எப்பொழுது பார்த்தாலும் ஐபேடில் விளையாடுவதை பார்த்து அவர் இந்த பொம்மையை கண்டுபிடித்து கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தினார். அந்த ஆஸ்மோவும் டைம் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
கியூரியாசிட்டி:
அமெரிக்க விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. கியூரியாசிட்டி செவ்வாய் கிரகத்தில் உள்ள மர்ம பாறைகளை ஆய்வு செய்ய உள்ளது.