அமெரிக்காவின் இன்னொரு இந்தியப் பிரச்னை 'நரேந்திர மோடி': டைம்ஸ் பத்திரிகை
வாஷிங்டன்: பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி விவகாரம், அமெரிக்காவுக்கு இன்னொரு மிக முக்கிய இந்தியப் பிரச்னையாக வெடிக்கும் என்று அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தனது பணிப்பெண்ணின் விசா மோசடி விவகாரத்தில் பிரச்னையில் சிக்கியது, இந்திய - அமெரிக்க உறவில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றவர் நாட்டு தூதரக விவகாரங்களில் சில நெருக்கடியான நடவடிக்கைகளை எடுத்தன.
இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. இந்நிலையில், 2002 குஜராத் கலவரங்களைக் காரணம் காட்டி, பொறுப்பில் இருந்த நபர் கலவரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அமெரிக்கா மோடிக்கு விசா மறுத்து வந்தது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்களில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று தீர்ப்புகளைக் கூறி வந்த நிலையிலும், அமெரிக்காவின் போக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோடிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தால், அது அமெரிக்காவின் இந்தியா குறித்த வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவுக்கான இன்னொரு பிரச்சனையாக இருக்கும் என்றும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.