"செல்பி" வெறியர்களிடம் சிக்கி மூச்சுத் திணறி செத்துப் போன டால்பின்!
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் செல்பி மோகத்தில் குட்டி டால்பின் ஒன்றை பொதுமக்கள் இணைந்து அமுக்கி ஆளாளுக்குப் போட்டோ எடுத்ததில் அது பரிதபமாக இறந்து போனது
பியூனஸ் அயர்ஸ் கடற்கரை அருகே தாயுடன் இந்த குட்டி டால்பின் வந்துள்ளது. அப்போது அங்கு கடற்கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டவர்களும், கடலை ரசித்தவர்களும், கடற்கரையில் அமர்ந்து "கடலை" போட்டுக் கொண்டிருந்தவர்களும் ஓடி வந்து அதை சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் அந்த குட்டி டால்பினை பிடித்து தண்ணீருக்கு வெளியே வைத்து நீண்ட நேரம் செல்பி எடுத்துள்ளனர். வெகு நேரம் தண்ணீருக்கு வெளியில் இருந்ததால் அந்த குட்டி டால்பின் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தே போனது. இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
பிரான்சிஸ்கானா ரகத்தை சேர்ந்த இந்த டால்ஃபின் அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தள மோகத்தில் ஒரு குட்டி டால்பினை உயிர் என்றும் பாராமல் மக்கள் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.