திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற 'எமிரேட்ஸ்' விமானம் தரையிறங்கும்போது விபத்து! பயணிகள் தப்பினர்
துபாய்: திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இருப்பினும் அதிருஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 வகை விமானம் இன்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.
துபாய் நேரப்படி மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது.
விமானம் சிறிது தூரம் பைலட் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இருப்பினும், விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பிடித்திருந்ததால், அங்கு பெரும் கரும்புகை எழுந்தது. உடனடியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எமர்ஜென்சி வாசல்கள் வழியாகவும் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தால் பயணிகளின் உயிருக்கோ, உடலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த சம்பவம் துபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.