அம்மாவும், ஒரு வயது தம்பியும் மரணம்... வீட்டில் 2 நாட்களாக உணவுக்கு அழுத 2 வயதுக் குழந்தை!
நியூயார்க்: அமெரிக்காவில் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த தாயும், அக்குழந்தையும் இறந்த நிலையில் அப்பெண்ணின் மூத்த மகனான 2 வயதுக் குழந்தை இரண்டு நாட்களாக அவ்வீட்டில் அழுது கொண்டிருந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார் எரிக்கா தோமசியான்.
ஏற்கனவே மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த எரிக்கா தனது ஒரு வயது மகன் மைக்கலுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது திடீரென இயற்கையாக மரணமடைந்தார்.
குழந்தையும் இறப்பு:
ஊட்டிக்கொண்டிருந்த உணவு தொண்டையில் சிக்கியதால் ஒரு வயது குழந்தையான மைக்கலும், எரிக்கா இறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான்.
தனியே மாட்டிக் கொண்ட நேதன்:
குழந்தைகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த எரிக்காவின், மூத்த மகனான 2 வயது நேதன், அவர்கள் இறந்த பின்னும் தனியே அந்த வீட்டில் அழுது கொண்டிருந்தான்.
போலீசாருக்கு தகவல்:
இரண்டு நாட்களாக உணவைத் தேடி கதறி அழுத நேதனின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் அளித்தனர்.
வாடிப்போன குழந்தை:
இதையடுத்து, அந்த வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார், இரண்டு நாட்களாக உணவின்றி வாடிப்போன நேதனைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.