நம்மூர்ல வெங்காயம்னா.. பாக்.ல தக்காளி.. ஒரு கிலோ எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே வந்துடும்!
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காய விலை அதிகரிப்பால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் நம்மூர் சமையல்களில் வெங்காயமும், தக்காளியும் முக்கியமானவை. வெங்காயத்தை உரிக்காமலேயே விலையைக் கேட்டே மக்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
வெங்காய விலை உயர்வைத் தடுக்கவும், பதுக்கல்களை கண்டறியவும் அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தக்காளி
இப்படியாக நாம் வெங்காயத்தால் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோம் என்றால், பாகிஸ்தானில் தக்காளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ. 180 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விளைச்சல் குறைவு
காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர். அதோடு இந்தாண்டு அங்கு உள்நாட்டு விளைச்சலும் எதிர்பார்த்தபடி இல்லை. இதன் காரணமாகவே அங்கு தக்காளி விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவசர நடவடிக்கை
இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஈரானில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் தேசிய உணவு பாதுகாப்பு அமைச்சரவை கூறியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முரணான கருத்து
ஆனால், நாட்டு நடப்பிற்கு எதிராக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிதி ஆலோசகர் அப்துல் ஹபீஸ் ஷேக் செய்தியாளர் சந்திப்பில், "கராச்சி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் விலைவாசி உயர்ந்துவிட்டதாக பொய் கூறுகிறார்கள்" எனக் கூறியிருந்தார்.
நெட்டிசன்கள் கோபம்
அவரது இந்தப் பேச்சு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘யார் பொய் சொல்கிறார்கள்.. எங்கே ரூ. 17க்கு தக்காளி விற்கும் கடை எனக் காட்டுங்கள்" என பாகிஸ்தான் நெட்டிசன்கள் அப்துல் ஹபீஸை கோபத்தோடு டிரோல் செய்து வருகின்றனர்.
திருட்டு பயம்
இது ஒருபுறம் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அங்கு திருட்டு பயமும் அதிகரித்துள்ளது. எனவே தக்காளி பண்ணைகளை ஆயுதம் ஏந்திய காவலர்கள் காவல் காத்து வருகின்றனர்.