செக்கச் சிவந்த வானம்.. அட இங்க பாருங்க ஸ்பெயினே செவந்து போயிருச்சு!
ஸ்பெயின் நாட்டில் தக்காளி திருவிழா நடைபெற்றது.
Recommended Video
பனோல்: எங்க பாத்தாலும் சிவப்பு... எல்லார் மேலேயும் சிவப்பு... சிவப்பு சாறுகள்... சிவப்பு குளங்கள்... செவ செவன்னு செவந்து கிடந்தது ஸ்பெய்ன்! என்ன காரணம்.. எல்லாமே தக்காளி ஓய்... தக்காளி!
தக்காளி திருவிழாவில்தான் இந்தக் களேபரம். இந்த திருவிழாவே சுவாரஸ்யம் என்றால் அது ஏன் நடைபெறுகிறது என்ற காரணம் அதைவிட சுவாரஸ்யம்!
1945, ஆகஸ்ட் 29, புதன்கிழமை. சில இளைஞர்கள் பனோல் நகர சதுக்கத்தில் நடந்த ஒரு அணிவகுப்பில் கலந்து கொண்டார்களாம். அந்தஅணிவகுப்பில் ஒருத்தர் அந்த அலங்கார வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்துட்டார். அவரே கீழே விழுந்துட்டு, அங்கிருந்தவர்களிடம் சண்டைக்கும் போய்விட்டார்.
அதே இடத்தில் சண்டை
கோபத்தில் கையில் என்னென்னெல்லாம் கிடைச்சதோ எல்லாத்தையும் தூக்கி அவங்க மேல அடிக்க ஆரம்பிச்சிட்டார். அவங்களுக்கும் பதிலுக்கு அடிக்கலாம்னு பாத்தா கையில எதுவுமே கிடைக்கல. பக்கத்துல ஒரு கடையில் தக்காளி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அவர்மேல வீச ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கப்பறம் போலீஸ் வந்து சமாதானம் பண்ணிட்டு போச்சு. இதோடு விஷயம் முடிஞ்சு போச்சுன்னு பாத்தா, திரும்பவும் அதே வருஷம், அதே நாள். அதே இடத்துக்கு தக்காளிகளை வீச ஆரம்பித்தனர்.
தக்காளிக்கு இறுதி சடங்கு
சண்டை போட்ட ரெண்டு கோஷ்டியும் மறுபடியும் சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க. அப்பறம் திரும்பவும் போலீஸ் வந்து கைது செய்து போனது. 1957-ல் இப்படி போடுற தக்காளி சண்டைக்கு ஒரு முடிவு கட்டினாங்க. அதாவது தக்காளிக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டதாம். ஒரு பெரிய தக்காளியை எடுத்து, சவப்பெட்டியில் வெச்சி, அதுக்கு வாத்தியமெல்லாம் முழங்கி, இறுதி ஊர்வலமாக கொண்டுபோய் அடக்கம் செய்யப்பட்டது. அதோடு தக்காளியை வைத்து நடைபெற்ற சண்டை போய், மகிழ்ச்சியான விழாவாக மாறிவிட்டது. ஆனால் அதே ஆகஸ்ட் மாசம், அதே நாள், அதே இடம், தக்காளி வைத்து நடத்தப்பட்டு வருகிறது.
தக்காளி குளியல்
இந்த தக்காளி திருவிழாவில் நாட்டில் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள வருவார்கள். இதுக்காகவே மலைபோல் தக்காளிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். தக்காளியை ஆளாளுக்கு எடுத்து ஒருத்தர் மேல் ஒருத்தர் எடுத்து வீசிக்கிறாங்க. தக்காளி உடம்பில் பட்டு, உடம்பெல்லாம் தக்காளி சாறு வழிந்து, சாலைகளில் எல்லாம் தக்காளி சாறு வழிந்து... தக்காளி குளமே அங்கு உருவாகி... அதில் போய் எல்லாரும் மொத்தமாக குளித்து வருவார்கள்!
ரிசவர்வேஷன் உண்டு
ஒரு மணி நேரத்துக்கு ஒரே கூத்தும் கும்மாளமும்தான்! கடைசியில எல்லாரும் ஆட்டம் போட்டு முடித்த பிறகு தீயணைப்பு பிரிவினர் தண்ணீரை கொண்டு வந்து அடித்து, மக்கள், அந்த இடங்கள் உட்பட எல்லாத்தையும் கழுவி விட்டுட்டு போவாங்க. விளையாட்டுக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும், அன்பை வெளிப்படுத்த விளையாடுவதுதான் இந்த தக்காளி திருவிழா. இந்த விழாவில் கலந்து கொள்ளணும்னா முன்னாடியே ரிசர்வேஷன் பண்ணிக்கனுமாம்.
விளையாடி மகிழ்ந்தனர்
இந்த ஆண்டும் இந்த விழா நடைபெற்றது. தக்காளி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். வாண வேடிக்கைகளுடன் தக்காளி திருவிழா தொடங்கியது. 6 லாரிகளில் 145 டன் தக்காளிகள் கொண்டுவரப்பட்டது. தக்காளிகளை பெற்றுக்கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவர்மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர்.