சயனோபாக்டீரியா.. போஸ்ட்வானா யானைகள் மர்ம மரணத்திற்கு காரணம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
போஸ்ட்வானாவில் யானைகள் உயிரிழந்ததற்கு ஒருவகை பாக்டீரியா தொற்று தான் காரணம் என தெரியவந்துள்ளது.
காபரோனி: போஸ்ட்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகள் இறந்ததற்கு தண்ணீரில் இருக்கும் சயனோபாக்டீரியா எனும் ஒருவகை பாக்டீரியா தான் காரணம் என அந்நாட்டின் வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் இணை இயக்குனர் சிரில் டாலோ தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, வனவிலங்குகள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் ஓகவாங்கோ வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகின்றன.
அங்குள்ள ஓகவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 281க்கும் அதிகமான யானைகள் மர்ம நோய் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
தென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்!
நூற்றுக்கணக்கான யானைகள்
அப்பகுதியில் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களை பார்த்ததாக பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு யானைகள் மரணம் எனக் கருதப்பட்டது. ஆனால் சுமார் 300 யானைகள் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
குழம்பிய ஆர்வலர்கள்
போட்ஸ்வானாவில் யானைகள் கொத்துக் கொத்தாக இறந்த தகவல் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடைய பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. வறட்சி இல்லாத சூழலில் இத்தனை யானைகள் உயிரிழந்திருப்பது ஏன் என தெரியாமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழம்பி வந்தனர்.
சயனோபாக்டீரியா
இந்நிலையில் போஸ்ட்வானாவில் யானைகள் இறந்ததற்கு தண்ணீரில் இருக்கும் சயனோபாக்டீரியா எனும் ஒருவகை பாக்டீரியா தான் காரணம் என அந்நாட்டின் வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் இணை இயக்குனர் சிரில் டாலோ தெரிவித்துள்ளார். இருப்பினும், அதே தண்ணீரை குடித்த மற்ற விலங்குகள் எதுவும் இறக்காதபோது யானைகள் மட்டும் செத்ததற்கு காரணம் என்ன என்பது உள்பட பல கேள்விகளும் இன்னும் விடைக் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
விரிவான ஆய்வு
யானைகள் இறந்தது குறித்து தொடர்ந்து விரிவான விசாரணையும், ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரில் டாலோ தெரிவித்துள்ளார். இதற்கிடையே போஸ்ட்வானாவின் அண்டை நாடான ஜிம்பாப்வேயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. பாக்டீரியா தொற்று காரணமாக அந்த யானைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.