நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.4 ஆக பதிவு
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து தென் மேற்கு பகுதியில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நுவகோட் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 11.34 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது.
இந்நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 9000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இருப்பினும், ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளுக்கும் மேல் பதிவான 461 முக்கிய பின்னதிர்வுகளின் தகவல் மட்டும் தேசிய புவியியல் ஆய்வு மையம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. நேபாளத்தில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.