டாக்கா வழியாக கொல்கத்தா- அகர்தலா இடையே நேரடி பேருந்து சேவை- சோதனை ஓட்டம் தொடங்கியது!
அகர்தலா: வங்கதேச நாட்டின் தலைநகர் வழியாக கொல்கத்தா- அகர்தலா இடையேயான பேருந்து சேவையை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. இதன் மூலம் கொல்கத்தாவில் இருந்து 16 மணிநேரத்தில் அகர்தலாவை சென்றடையலாம்; மேலும் வழக்கமான பயணத்தைவிட 513 கிலோ மீட்டர் தூரம் குறையும்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து திரிபுராவின் அகர்தலா செல்ல வேண்டுமானால் அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு சென்று பின்னர் திரிபுராவின் தலைநகர் அகர்தலா செல்ல வேண்டும்.
அதாவது மொத்தம் 1,675 கி.மீ தொலைவு சாலை மார்க்கமாக பயணிக்க வேண்டும். அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் அனைத்தும் மலைப் பாதைகள்.. இதனால் சுமார் 32 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக 1999ஆம் ஆண்டு முதல் முறையாக கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தின் டாக்கா வழியாக திரிபுராவின் அகர்தலாவுக்கு பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் கொல்கத்தாவில் இருந்து டாக்காவுக்கு 8 மணிநேரம்; டாக்காவில் இருந்து அகர்தலாவுக்கு 4 மணிநேரம்; வங்கதேசத்துக்குள் நுழைந்து செல்வதால் குடியுரிமை நடைமுறைகளுக்கு சில மணிநேரங்கள் என மொத்தம் 15 முதல் 16 மணிநேர பயணம்தான் ஆனது.
பின்னர் 2003ஆம் ஆண்டும் இந்த பேருந்து சேவை இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது வரும் 6-ந் தேதி பிரதமர் மோடி, வங்கதேச பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது கொல்கத்தா-டாக்கா- அகர்தலா பேருந்து சேவையை மீண்டும் இயக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதற்காக இப்பேருந்து சேவை சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. மொத்தமாக 16 மணிநேரம் இந்த பயண நேரம் இருக்கும் என்றும் வழக்கமான பயணத்தை விட 513 கி.மீ. தூரம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.