எச்1பி விசா முறையை கடுமையாக்கிய ட்ரம்ப் நிர்வாகம்... இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதகம்!
வெளிநாட்டவர்க்கு அமெரிக்க அரசு வழங்கும் எச்1பி விசா முறையை ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணியாற்ற செல்லும் வெளிநாட்டவர்க்கு வழங்கப்படும் எச்1பி விசா முறையை ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறாரோ அது போலவே அதிபர் ட்ரம்ப் வேலைவாய்ப்பு சலுகைகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று கூறி வருகிறார். இதனையே பிரதானமாக முன் வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தையும் கடந்த 2016ல் ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார்.
இதே போன்று தான் பொறுப்பேற்றது முதல் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை தரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதற்கட்டமாக வெளிநாட்டில் அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எச்1பி விசாவிற்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
எச்1பி விசா முறையில் கடுமை
அமெரிக்க குடியுரிமையான கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தால், அது வரை எச்ஃபி விசாவை நீட்டிக்க வழங்கப்பட்டிருந்த வாய்ப்பிற்கும் சமீபத்தில் ட்ரம்ப் தடை விதித்தார். இந்நிலையில் எச்1பி விசா வழங்குவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி நேற்று ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது
மூன்றாவது நபரின் பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் விசா பெற வேண்டும் என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் இந்த புதிய அறிவிப்பு வெளிநாடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கே கடுமையான பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது.
இந்தியர்களே அதிகம்
இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் எச்1பி விசாவை பயன்படுத்தியே அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர். அமெரிக்கா வழங்கும் மொத்த எச்1பி விசாவில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக எச்1பி விசா
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி உயர் கல்வி பயிலவும், பணியாற்றவும் எச்1பி விசா வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படும் இந்த விசாவானது நிரந்தரமாக தங்கும் கிரின்கார்டு கிடைக்கும் வரை விசாவை நீட்டித்து பணியாற்றும் நடைமுறை இதுவரை இருந்தது குறிப்பிடத்தக்கது.