ஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் அமெரிக்க இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க் எஸ்பர் என்பவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே மோதல் இருந்து வருகிறது. இது நேற்று போராக மாறும் சூழல் உருவாகியது. கடைசி நிமிடத்தில் அமெரிக்க அதிபர் தாக்குதல் வேண்டாம் என்று கூறியதால் அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை.
முன்னதாக அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க ஈரானும் தயார் நிலையிலேயே இருந்தது. ஈரானும் தங்கள் மீது ஒரு குண்டு பாய்ந்தாலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தீக்கிரையாகும் என்று கூறியிருந்தது.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அமைச்சர் யாருமின்றி அப்பதவி காலியாக இருந்துவந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துவந்த ஜிம் மேட்டிஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி தனது பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து இந்த துறையின் பொறுப்பு அமைச்சராக பேட்ரிக் ஷனகன் இருந்து வந்தார். சிறிது காலத்திற்கு பின்னர் அவரும் அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை.
இரு நாடுகளுக்கு இடையே போர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழலில் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு 55 வயதான மார்க் எஸ்பர் ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார். வழக்கமாக அமெரிக்காவில் ஒரு துறைக்கு ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மார்க் எஸ்பருக்கும் செனட்டின் ஒப்புதல் வேண்டும். செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது என்று தெரிகிறது.