'பிரதமர் மோடி அதை கவனிச்சுக்குவார்'.. பாகிஸ்தான் குறித்து ஷாக் கேள்விக்கு... டிரம்ப் 'கூல்' பதில்
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நியூயார்க்கில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், பிரதமர் (பிரதமர் மோடி) அதைக் கவனித்துக்கொள்வார் என்றார்.
74-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
ஹூஸ்டன் நகரில் நடந்த மோடி நலமா? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இதில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்டு பேசினார். இதன் பின்னர் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹூஸ்டனில் இருந்து நேற்று நியூயார்க் சென்றார்.
ஐநாவில் மோடி உரை
74-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் பருவ நிலை மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்பின்னர் ஜெர்மனி, நெதர்லாந்து, கதார், பூடான், இத்தாலி, மாலத்தீவு, உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டிரம்புக்கு மோடி நன்றி
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி செவ்வாய் இரவு 9.45 மணி அளவில் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள்.
டிரம்ப் என் நண்பர்
இந்த சந்திப்புக்கு முன் பேசிய பிரதமர் மோடி, ஹுஸ்டன் நகருக்கு வந்த டிரம்புக்கு நன்றி. அவர் என் நண்பர், அத்துடன் இந்தியாவின் சிறந்த நண்பர் என்றார். இந்த சந்திப்பு குறித்து பேசிய டிரம்ப் எங்களுக்குள் மிக விரைவில் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்றார்.
|
மோடி பார்த்துக்குவார்
அப்போது செய்தியாளர்கள் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அதிபர் டிரம்பிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், பிரதமர் (பிரதமர் மோடி) அதைக் கவனித்துக்கொள்வார் என்றார்.
|
டிரம்ப் அதிரடி பேச்சு
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று டிரம்ப்பை சந்தித்தார். அப்போது இம்ரான்கான் முன்னிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் 3-வது முறையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.