எல்லாம் முடிந்தது.. இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.. கிம்மிற்கு பகீர் கடிதம் அனுப்பிய டிரம்ப்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்க இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்க இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு நாட்டு மக்களிடையே இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவர் இடையே இருந்த நட்பு மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது.
சமீப காலமாக அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் நண்பர்களாக மாறிக்கொண்டு இருந்தனர். இந்த வருட தொடக்கத்தில்தான் இரண்டு பேரும் அணு ஆயுதங்களை கால் பந்து போல கற்பனை பண்ணிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்வோம் என்று பேட்டி அளித்தனர். ஆனால் ஏனோ திடீர் என்று நண்பர்கள் ஆனார்கள்.
சந்திப்பு திட்டம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருந்தனர். சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் சந்திக்க இருந்தனர். இதில் அணு ஆயுதங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டனர். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இதில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
ரத்து
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம்மிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நேற்று அவர் எழுதிய கடிதத்தில், சிங்கப்பூர் சந்திப்பை ரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இருவரும் சந்தித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும், வடகொரியா அதிபரின் மோசமான அமெரிக்காவை தாக்கக்கூடிய வார்த்தைகளால் பெரிய அளவில் மனமுடைந்து இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.
காரணம்
வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவெடுத்தது. ஆனால், மொத்தமாக நாட்டில் இருந்து வெளியே எடுத்து செல்லாமல் நாட்டிற்குள்ளேயே பயன்படுத்தாமல், சோதனை செய்யாமல் வைக்க முடிவெடுத்தது. ஆனால் லிபியாவில் அணு ஆயுதங்களை கைவிட்டது போல மொத்தமாக வடகொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்க கோரிக்கை வைத்தது. இதற்கு வடகொரியா ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் இப்போது பிரச்சனை ஆகியுள்ளது.
போர் அபாயம்
டிரம்ப் தனது கடிதத்தில், உலக அமைதிக்கான வாய்ப்பை வடகொரியா அதிபர் கெடுத்துக் கொண்டார். கடவுளை வேண்டிக்கொள்கிறேன், அமெரிக்கா வடகொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் நிலைமை வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.