அமெரிக்காவைச் சுற்றி சுவர் எழுப்ப 20 லட்சம் கோடி.. பட்ஜெட்டில் 'பாம்' வைத்த டிரம்ப்!
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 20 லட்சம் கோடி நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கிறார்.
நியூயார்க்: டொனால்ட் டிரம்ப் அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புவதற்காகப் பதவி ஏற்றத்தில் இருந்து பாடுபட்டு வருகிறார். ஏற்கனவே அங்கு இருந்த நிலத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி இருக்கிறது.
எல்லையில் சுவர் கட்டுவதைத் தடுப்பதற்காக அந்த நிறுவனம் இந்தச் செயலில் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கவும் கட்டுமான பணிக்கும் 20 லட்சம் கோடி நிதியை பட்ஜெட்டில் டிரம்ப் ஒதுக்கி இருக்கிறார்.
ஏற்கனவே அங்கு 2018க்கான பட்ஜெட் இன்னும் ஏற்கப்படாமல் இருக்கிறது. இதனால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.
அதிபரின் வாக்குறுதி
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் அவர் கூறிய வாக்குறுதிகளில் முக்கியமானது சுவர் எழுப்புவது. அதன்படி அமெரிக்காவின் அனைத்து எல்லை பகுதிகளையும் சுவர் எழுப்பி மூடப்போவதாகக் கூறினார். இதன் காரணமாக யாரும் அமெரிக்க நாட்டுக்குள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது.
மெக்சிகோ எல்லை
முக்கியமாக மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நினைத்தார். இந்தத் திட்டத்திற்கு நிறைய எதிர்ப்புகளும், ஆதரவுகளும் வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ''கார்ட்ஸ் அகெய்ன்ஸ்ட் ஹுமானிட்டி'' என்ற நிறுவனம் எல்லையில் இருக்கும் முக்கால்வாசி நிலங்களை விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. டிரம்ப் சுவர் எழுப்புவதைத் தடுக்க இப்படிச் செய்தனர்.
முதல் பட்ஜெட்
தற்போது பட்ஜெட்டில் இந்த நிலத்தை வாங்க பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லையைப் பாதுகாக்க 90 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை வாங்கவும் கட்டுமான பணிக்கும் இந்த பணம் பயன்படுத்தப்படும்.
நீளம்
முதற்கட்டமாக 96 கிலோ மீட்டருக்கு சுவர் கட்டப்பட உள்ளது. அதற்கு அடுத்தபடியான அடுத்த வருடம் 103 கிலோ மீட்டருக்கு சுவர் அமைக்கப்பட உள்ளது. இது தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.