“கிம் ஜாங்-உன்னை நல்லவராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்”: வட கொரிய கலைஞர்கள்
சிங்கப்பூரில் நடைபெறும் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் மனித உரிமை குறித்து விவாதிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அணு ஆயுத விவகாரத்தை மனித உரிமை விவகாரத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாது என்று வட கொரியாவிலிருந்து தப்பி அமெரிக்கா சென்ற கிரேஸ் ஜோ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வட கொரியாவை விட்டு சென்ற கலைஞர்கள், டிரம்ப்-கிம் சந்திப்பு குறித்து பிபிசியின் ஹெத்தர் சென் மற்றும் மிஞ்சி லீ ஆகியோரிடம் அவர்கள் மனம் திறந்து பேசினர்.
ஒரு சர்வதேச அரசியல்வாதியாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வெளிப்படலாம். ஆனால் அவரது தலைமையில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட வட கொரிய கலைஞர்கள், இது போன்ற அமைதி பேச்சுவார்த்தைகளால் கிம் ஒரு சர்வாதிகாரி இல்லை என்று கூறிவிட முடியாது என்கின்றனர் அவர்கள்.
பல ஆண்டுகளாக வட கொரியாவில் பிரச்சார பிரிவில் ஒரு முக்கிய பங்காற்றினார் ஓவியர் சாங் ப்யூக். ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்த இவரை அடையாளம் கண்ட ஆட்சியாளர்கள் அவரை அரசின் ஓவியாராக தேர்வு செய்தனர்.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிராக தெளிவான, பிரகாசமான படங்களை வரைந்தார் சாங் ப்யூக். வட கொரியாவில் மகிழ்ச்சியான பணியாளர்கள் இருப்பது போலவும், கிம் பரம்பரையையும் அவர் வரைந்து வந்தார்.
தற்போது தென் கொரிய தலைநகர் சோலில் உள்ள அவர், "அரசின் பிரச்சார கலைஞராக, வட கொரியாவையும் அதன் தலைவர்களையும் சிறந்த மனிதர்களாக காண்பிக்க வேண்டும் என்று என்னிடம் எதிர்பார்த்தனர்" என்று கூறினார்.
"வட கொரியாவில், கலை என்பது அழகாக மட்டுமே இருக்க முடிந்தது. அங்கு வீடு இல்லாதவர்கள் என்று யாரும் கிடையாது. உணவு பற்றாற்குறை இல்லாமல் அனைவரும் குண்டாக அழகாக இருந்தனர்", இந்த ஓவியங்கள் எல்லாம் பொய்யே இன்றி வேறில்லை.
வட கொரியாவை விட்டு 2002ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு சென்ற ப்யூக், வட கொரிய சிறை முகாமில் தினமும் சித்தரவதை அனுபவித்தார்.
"வட கொரிய சிறை முகாமில் இருந்தது மிகவும் கொடுமையாக இருந்தது" என்று நினைவு கூர்கிறார் அவர்.
"பறவைகள் பாடுவது கேட்கும், நீல வானம் தெரியும். ஆனாலும், உங்களுக்கு செத்து விடலாம் என்று தோன்றும். தற்போது கிம்மை நல்ல மனிதராக காண்பிக்கும்போது, எனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்" என்கிறார் அவர்.
தற்போது கிம்மை அன்புக்குரியவர் போல நடத்தப்படுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அணுஆயுத திட்டங்களாலும், மனித உரிமைகளை மீறியும் நடந்து கொண்ட ஒருவரை சந்திக்க உலக தலைவர்கள் முண்டியடிக்கின்றனர்.
அவரது ஆட்சியில் பலரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தற்போது அவரை மனிதர் என்று மக்கள் கூறுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், "சர்வாதிகாரியை நல்லவர் போல வர்ணிப்பதும், அவரது ஆட்சியை நல்லாட்சி போல கூறுவதும் மிகவும் தவறானது" என்றார்.
- மூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி?
- டிரம்ப் - கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
சோலில் உள்ள கங்கம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் மற்றொரு கலைஞர் சொய் சங்-கூக்.
மேற்கத்திய உளவாளிகள் குறித்து கேலிச்சித்திரங்ளை வட கொரிய அரசுக்காக வரைந்து வந்தார்.
"வட கொரியாவில் இருக்கும் ஒருவர், கிம் ஜாங்-உன் குறித்து புகழ்ந்து பேசினால் எனக்கு அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும்" என்கிறார் அவர்.
"அப்படி சொல்பவர்கள், என்னை போன்ற வட கொரியர்களை பார்த்ததில்லை என்று அர்த்தம். நானும் என் குடும்பமும் துன்புறுத்தப்பட்டோம், தாக்கப்பட்டோம். எங்கள் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது அவர்களுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள பல வட கொரியர்கள் போலவே இவரும் டிரம்ப்-கிம் உச்சிமாநாட்டை கவனமாக பார்க்கிறார்.
"உலக தலைவர்களுடன் கிம் வலம் வரும் புகைப்படங்களை பார்க்கும்போது எனக்கு கோபமாக வருகிறது. ஏனெனில், இது வட கொரியாவில் கிம்மின் பிம்பத்தை பலப்படுத்தி, பலரையும் மூளைச்சலவை செய்துவிடும்" என்கிறார் அவர்.
சொய் சங்-கூக் மேலும் கூறுகையில், கிம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் வட கொரியாவின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று இந்த உலகம் கருதுகிறது. உண்மையிலே இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
கிம் ஜாங்-உன் விரக்தியின் விளிம்பில் உள்ளார். எங்கு போவதென்று தெரியாமல் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று சொய் கூறுகிறார்.
உலகில் பலமான அதிகாரமிக்க நாட்டை ஆளும் டிரம்புக்கு, மனித உணர்வுக்கான கடமை உள்ளது என்று தெரிவித்த அவர், டிரம்பிடம் ஏதேனும் உத்தி உள்ளது என்று நம்புவதாகவும், வட கொரியர்களை அவர் புறக்கணிக்க மாட்டார் என்று நினைப்பதாகவும் சொய் கூறினார்.
பாதுகாப்பான வட கொரியாவிற்கு திரும்பிச் செல்ல விருப்பமா என்று கேட்டதற்கு, உற்சாகமாக ஆம் என்று சொல்கிறார் கலைஞர் சாங் ப்யூக்.
"எனக்கு பியாங்யாங்கில் ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும். என் நாட்டு மக்களுக்கு கருத்து சுதந்திரம் குறித்து காண்பிக்க வேண்டும். அது என் வாழ்நாள் கனவு. நான் உயிருடன் இருக்கும் போதே இது நடக்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப்-கிம் சந்திப்பு வட கொரியாவில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த தொடக்கமாக இருக்கும் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூர்: கிம் ஜாங்-உன்னின் இரவு உலா (புகைப்படத் தொகுப்பு)
- சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா
- கிம் ஜோங் - உன்னை தேடிய தென் கொரியா மக்கள்
- விவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி மீதான வழக்குப்பதிவு முறையா?