தயாரானது சிங்கப்பூர்.. விதிகளில் மாற்றம்.. அனல்பறக்கும் கிம்-டிரம்ப் சந்திப்பு
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்.
Recommended Video
சிங்கப்பூர்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்கும் நிகழ்விற்கு பல முக்கியமான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஹோட்டலில் இதற்காக சில மாற்றங்கள் கூட செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சந்திப்பிற்காக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். வரும் ஜூன் 12ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர்.
உலக வரலாற்றில் இது முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
கெபல்லா ஹோட்டல்
இவர்கள் இருவரும் சிங்கப்பூரின் கெபல்லா ஹோட்டலில் சந்திக்க உள்ளனர். இந்த கெபல்லா ஹோட்டல் சென்டோஸா தீவில் உள்ளது. இந்த தீவின் பெயர் அர்த்தம், சமாதானம் மற்றும் அமைதியாகும். அதற்கு தகுந்தாற் போல பெரிய அளவில் அமைதிக்கான சந்திப்பு ஒன்று இங்கு நடக்க உள்ளது.
பல அறைகள்
இந்த ஹோட்டல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதில் மொத்தம் 112 அறைகள் உள்ளது. உலகில் மிகவும் செலவு பிடிக்கும் ஹோட்டல்களில் இதுவும் ஒன்று. இந்த ஹோட்டலில்தான் பொதுவாக வெளிநாட்டு அதிபர்கள் தங்குவது வழக்கம். சிங்கப்பூர் சென்று இருந்த பிரதமர் மோடியும் இங்குதான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிக செலவு
இந்த சந்திப்பை சிங்கப்பூர் தானாக முன்வந்து ஏற்று நடந்துகிறது. ஆனால் இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இவர்கள் சந்திப்பிற்கான செலவு, பாதுகாப்பு செலவு எல்லாம் சிங்கப்பூர் கவனித்துக் கொள்ளும். ஆனால் அதிபர்கள் தங்கும் செலவை அந்த நாடுகளே செய்யும். ஆனால் கிம் தங்கும் செலவை யார் செய்வது என்ற குழப்பம் நிலவி வருகிறது.
சில விதிகள்
இவர்கள் ஒரு பெரிய அறையில் சந்திக்க இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அறைக்குள் வரும் வகையில் இரண்டு கதவுகள் எதிர் எதிர்பக்கம் இருக்கும். யாரும் யாருக்கும் காத்திருக்காத வகையில், ஒரே நேரத்தில் அதிபர்கள் உள்ளே வரும் வகையில் இந்த அறை மாற்றப்பட்டுள்ளது. இதை சுற்றி 130 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.