புதினுடன் பேச்சுவார்த்தை- வர்த்தகம், ராணுவம் குறித்து ஆலோசனை: ட்ரம்ப்
ட்ரம்ப் புதின் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஹெல்சின்கி: சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் இன்று நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் கிரிமியா, சிரியா விவகாரங்கள் மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. அத்துடன் ரஷ்யாவின் உளவுத்துறை அதிகாரிகள் 12 பேர் மீது குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா பதிவு செய்தது.
அதேபோல் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை ரஷ்யா கடைபிடித்தது. இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பும் ரஷ்யா அதிபர் புதினும் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் தொடக்கத்தில் இரு தலைவர்களும் கை குலுக்கிக் கொண்டனர்.
பின்னர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக புதினுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வர்த்தகம் முதல் ராணுவம் வரையிலான அனைத்து விவகாரங்களையும் இச்சந்திப்பின் போது பேசுவோம் என்றார்.
கிரிமியா, சிரியா விவகாரங்கள், அணு ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அமெரிக்காவின் பரம வைரியாக கருதப்பட்ட வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கடந்த மாதம் சிங்கப்பூரில் ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ரஷ்யா அதிபர் புதினுடனான இன்றைய சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.