உலக அமைதிக்கு பங்கமா அல்லது உள்நாட்டு குழப்பமா... திகிலூட்டும் ட்ரம்பின் மும்மூர்த்திகள்!
வாஷிங்டன்(யு.எஸ்). புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் அமைச்சரவையில், முக்கிய அதிகாரிகளின் தேர்வு திகிலூட்டும் வகையில் இருக்கிறது.
அமெரிக்க அரசின் அமைச்சர்கள் உட்பட முக்கிய பதவிகள் நியமன முறையில் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்ப்படும் அதிபர், அவர்களை தேர்வு செய்து நியமிப்பார்.
தேசிய பாதுகாப்புச் செயலர் தவிர அனைத்து பதவிகளுக்கும் செனட் அவையின் ஒப்புதல் தேவை.
அதிபர் பதவியேற்புக்கு முன்னதாகவே அனைத்து முக்கிய பதவிகளுக்கும் தேர்வு செய்து, அதிகார மாற்றதிற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
டொனால்ட் ட்ரம்ப் முக்கியமான மூன்று பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளார்.
அட்டார்னி ஜெனரலாக ஜெஃப் செசன்ஸ், புலனாய்வுத்துறை (சி.ஐ.ஏ) இயக்குனராக மைக் பாம்பெயோ மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளராக மைக்கேல் ஃப்ளின் ஆகியோரை ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
மூவருமே தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள்.
அட்டார்னி ஜெனரல் நாட்டின் நீதித்துறையை வழி நடத்துபவர். அலபாமா செனட்டரான ஜெஃப் செசன்ஸ் கடுமையான குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவானவர்.
சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களை வெளியேற்ற வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவரும் ஆவார்.
பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் ஃப்ளின், இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் இணைத்து கடுமையாக எதிர்ப்பவர்.
அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர். அதே நேரம் அப்படி ஏதும் எண்ணம் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்
சி.ஐ.ஏ இயக்குனர் மைக் ஃப்ளின், பெங்காஸி துயரச் சம்பவத்தில் அரசின் அணுகுமுறையை கடுமையாக விமரிசித்தவர். மீண்டும் இந்த விவகாரத்தை தூசி தட்டி எழுப்பக்கூடும். ஹிலரி க்ளிண்டன் மற்றும் ஒபாமா மீது புதிய குற்றச்சாட்டுகள் வரக்கூடும்.
ட்ரம்ப் தேர்தல் நேரத்தில் கூறிய நிலைப்பாடுகளை, செயல்படுத்தப் போகும் மும்மூர்த்திகளாக இவர்கள் தெரிகிறார்கள்.
தீவிரவாதம், சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேறுபவர்களை தடுப்பது என புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொன்னதை நிறைவேற்றும் எண்ணத்தில் செயல்படுவதாகவே இந்த நியமனங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து தரப்பினருடனும் நடு நிலையுடன் ட்ரம்ப் செயல்படப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு உருவான நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியுடன் செயல்படப் போகிறாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.