'ஹிலரியும் க்ளிண்டனும் ரொம்ப்ப நல்லவங்க'... சொல்றது யாரு... அமெரிக்காவின் புது சாரு!
வாஷிங்டன்(யு.எஸ்): தேர்தல் விவாதத்தின் போது ஹிலரியை ஜெயிலில் தள்ளுவேன் என்று சொன்ன ட்ரம்ப் தற்போது பின்வாங்கியுள்ளார்.
ஹிலரியும் பில் க்ளிண்டனும் மிகவும் நல்லவர்கள். அவர்களுக்கு மன வருத்தம் தர மாட்டேன் என்று தொலைக்காட்சி பேட்டியில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சிபிஎஸ் தொலைக்காட்சியின் 60 நிமிடங்கள் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
"ஹிலரி க்ளிண்டன் மிகவும் திறமையானவர். இந்த தேர்தல் முடிவு அவருக்கு மிகவும் மன வருத்தத்தைத் தந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனாலும், உடனடியாக எனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது.
பில் க்ளிண்டனும் பின்னர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் அருமையான மனிதர்கள். அவர்களுக்கு மன வருத்தம் தரும் வகையில் செயல்பட மாட்டேன்," என்று கூறினார்.
ஹிலரியை ஜெயிலில் தள்ளுவேன் என்று சொன்னீர்களே. தனியாக சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமித்து விசாரிக்கப் போகிறீர்களா? என்று கேட்கப் பட்டது.
அதற்கு, "தற்போது வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு, குடியேற்ற உரிமை தொடர்பான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது அவற்றில் கவனம் செலுத்தப் போகிறேன்," என்றார்.
மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட போது, அடுத்த நிகழ்ச்சியில் பதில் சொல்கிறேன் என்று நழுவி விட்டார்.
இன்னொரு கேள்விக்கு சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
தனது ஆதரவாளர்களையும் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு கேட்டுள்ளார். ட்ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் ' பயப்படாதீர்கள், எதற்காகவும் நீங்கள் பயப்படத் தேவை இல்லை' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் சொன்ன கடுமையான நிலைப்பாட்டைத் தவிர்த்து, அனைவருக்கும் பொதுவான நடுநிலையுடன் கூடிய செயல்திட்டங்களை நோக்கி ட்ரம்ப் நகர்வதாக, இந்த தொலைக்காட்சி பேட்டி மூலம் தெரியவருகிறது.