7 நாடுகள் தடைக்கு எதிராக குரல் கொடுத்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் டிஸ்மிஸ்.. ட்ரம்ப் அதிரடி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் சாலியேட்ஸை அதிபர் டொனால்டு டிரம்ப், பதவி நீக்கம் செய்துள்ளார். 7 நாடுகளை சேர்ந்தவர்களின் பயண தடைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்களுக்கு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தற்காலிக, அட்டர்னி ஜெனரல் சாலியேட்ஸ், நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், ட்ரம்பின் முடிவை ஏற்க முடியாது. இதற்காக வாதாட முடியாது எனக் கூறியிருந்தார்.
இதனால் கோபமடைந்த ட்ரம்ப், சாலியேட்ஸை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளை மாளிகை இந்த செய்தியை அறிவித்துள்ளது. அவருக்கு பதில், டானா போன்டே என்பவர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுவதாக கூறியுள்ளது.
அரசின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் அல்லது பதவியை விட்டு செல்லலாம் என, தடையை ஏற்க மறுக்கும் தூதர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.