அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதி இல்லாதவர்: ஒபாமா கடும் தாக்கு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஆவதற்குகுரிய குறைந்தபட்ச குணம், அறிவு, கம்பீரம், நேர்மை கூட டொனால்ட் டிரம்பிடம் இல்லை என தற்போதைய அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்ட் டிரம்பு நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒபாமா, அமெரிக்க அதிபர் ஆவதற்குகுரிய குறைந்தபட்ச குணம், அறிவு, கம்பீரம், நேர்மை கூட இல்லாதவர் டொனால்டு டிரம்ப். கடந்த 2005-ம் ஆண்டு பெண்கள் குறித்து டிரம்ப் பேசிய பேச்சு அவர் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்பதை காட்டுகிறது.
அரசு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஹிலாரியே மிகவும் சிறந்தவர். பின்லேடன் கொல்லப்பட்டபோது வெள்ளை மாளிகை கண்காணிப்பு அறையில் ஹிலாரியும் இருந்தார். அப்போது அமெரிக்க படைகளுடன் ஹிலாரி நடத்திய உரையாடலை நான் அறிவேன். அமெரிக்க அதிபர் ஆவதற்கு எல்லா தகுதிகளையும் ஹிலாரி பெற்றுள்ளார். டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்தால் அமெரிக்காவின் எதிர்காலம் நம்பிக்கையற்றதாக ஆகிவிடும். இவ்வாறு ஒபாமா பேசினார்.