சீனாவில் டிரம்புக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்க மறுப்பு! அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாட்கள் பயணமாக சீனா வந்திருக்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக மாறியிருக்கிறது. மறுபுறம் டிரம்புக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுப்பதில் இரு நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய இடத்திற்குள் சீன செய்தியாளர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு நுழைந்தபோது, அங்கிருந்த வெள்ளை மாளிகையின் முன்கூட்டியே திட்டமிடும் குழுவைச் சேர்ந்த ஒரு ஊழியர் கீழே தள்ளப்பட்டார். இதில் அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. இது அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

வெளியே நிற்கவைக்கப்பட்ட அதிகாரி
அதேபோல பெய்ஜிங்கில் உள்ள 'சொர்க்கக் கோவில்' பகுதிக்குச் டிரம்ப்-ஜி ஜின்பிங் சென்றபோது, டிரம்ப் உடன் சென்ற பாதுகாப்பு ஏஜென்ட் ஒருவரை சீன அதிகாரிகள் தடுத்தனர். அவர் துப்பாக்கி வைத்திருந்ததே அதற்குக் காரணம். அமெரிக்க விதிமுறைப்படி அதிபரின் பாதுகாப்பு அதிகாரி ஆயுதம் ஏந்தி இருக்க வேண்டும். ஆனால் சீன அதிகாரிகள் அதை அனுமதிக்க மறுத்தனர். சுமார் 30 நிமிடம் நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த அதிகாரி வெளியே நிற்கவைக்கப்பட்டார்.
சீனாவின் செயல்
இந்த இரண்டு சம்பவமும் சீன-அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் கோவில் வளாகத்தைப் பார்வையிட்ட பிறகு, அமெரிக்க செய்தியாளர்கள் ஒரு அறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் அதிபரின் வாகன பேரணியில் இணைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் பாதுகாப்புத் தடைகளைத் தகர்த்துக்கொண்டு ஓடிச் சென்று வாகனங்களைப் பிடித்தனர்.
முறையான வசதி இல்லை
இது மட்டுமல்லாது செய்தியாளர்களுக்குக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவில் நிலவும் கடும் வெயிலுக்கு நடுவே இந்தச் சிக்கல்கள் நடந்தன. அமெரிக்கக் குழுவில் இருந்த ஒருவர் இந்த ஒட்டுமொத்தச் சூழலையும் ஒரு குழப்பமான காட்சி போல இருந்ததாக கூறயிருக்கிறார்.
அமெரிக்க அதிகாரிகள்
இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் இருக்க மறுபுறம், சீனாவில் தங்களின் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசிகள் உளவு பார்க்கப்படலாம் என்ற அச்சமும் அமெரிக்க அதிகாரிகளை பாதித்திருந்தது. எனவே தற்காலிகத் போன்களை பயன்படுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இப்படியாக வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையேயும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டிருந்தது. இப்படி நடப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர், கடந்த 2017-ல் டிரம்ப் சீனா சென்றபோது இதேபோல அமெரிக்க-சீன பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
நியூக்ளியர் ஃபுட்பால்
'நியூக்ளியர் ஃபுட்பால்' அதாவது, அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பெட்டி கொண்டு சென்ற அதிகாரிக்கும் சீன பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமெரிக்க அதிகாரியை சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால், அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பெட்டி எப்போதும் அதிபருக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்பது விதி. இருப்பினும் சீன அதிகாரிகள் அதை மறுத்தபோது பெரிய பஞ்சாயத்து வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications