வரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு
சுவிட்சர்லாந்து: தமிழின வரலாற்றை அழிக்க காலம் காலமாக மேற்கொண்டுவரும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் நாமறிந்தவையே. வாழ்விடப் பறிப்பு, தொல்லியல் சான்றுகள் அழிப்பு, நூலக எரிப்பு என இவை தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகின் பலவேறு இடங்களில், வெவ்வேறு வடிவங்களில் தமிழினத்திற்கெதிராகவும், தமிழர் வரலாற்றினை காணாமல் போக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தமிழர் அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம், அவற்றை அமுக்கிவிடுவதில் அல்லது அழித்துவிடுவதில் பல்வேறு தரப்புகள் முனைப்புக்காட்டுகின்றன. இவற்றையும் மீறி வெளிவருபவை மிக சொற்ப விஷயங்களே.
யாருக்கு ஜாக்பாட் காத்திருக்கோ.. பாஜகவை வீழ்த்த இறங்கி அடிக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ்!
ஆவண காப்பகமும் வரலாற்று நூலகமும்
நம்மினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு, எதிர்கால சந்ததியினரின கைகளில் சேர்க்கபடாமல் விட்டு விட்டால் , கரைந்துபோன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க நம் இனமும் சேர்ந்துகொள்ளும் என்பது துயரமான உண்மையே இதனை தவிர்க்க 19. 05. 2019 ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுவிட்சர்லாந்து பேர்ன்நகரில் அமைந்த சைவநெறிக்கூடத்தில் தமிழர் களறிஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
பேரிகை முழங்க ஏந்தி வரப்பட்ட நூல்கள்
காலை 10.00 மணிக்கு ஐரோப்பாத்திடலில் சுவிட்சர்லாந்து நாட்டு கொடி, மூவேந்தர் கொடிகள், நந்திக்கொடி, சைவநெறிக்கூடத்தின் கொடி உள்ளிட்டவை இசை வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டன . இவற்றை முறையே திரு. தாவித் லொயிற்வில்லெர் (பல்சமய இல்லத் தலைவர்), திரு. காராளசிங்கம் விஜயசுரேஸ் (சைவநெறிக்கூடம்), திருமதி. தர்மசீலன் கலாமதி (செந்தமிழ் அருட்சுனையர், சைவநெறிக்கூடம்), திரு. நிவேதன் நந்தகுமார் (அக்கினிப்பறவைகள்), திரு. சின்னத்துரை சிறிரஞ்சன் (சைவநெறிக்கூடம், ஐக்கியராச்சியம்), திரு. நடராஜா தர்மசீலன் (சைவநெறிக்கூடம்), திரு. வினாசித்தம்பி தில்லையம்பலம் (மதியுரைஞர், சைவநெறிக்கூடம்), திரு. நடராசா சிவயோகநாதன் (மதியுரைஞர், சைவநெறிக்கூடம்) ஆகியோர் ஏற்றிவைத்தனர். இளந்தமிழ்ச்சிறார்கள் தமிழ் நூல்களையும் ஏடுகளையும் பேரிகைமுழங்க ஏந்தி வந்தனர்.
சமயங்களை கடந்த பொதுவழிபாடு
திரு. புண்ணியமூர்த்தி செல்வம் குழுவினர் மங்கல இசையுடன் நூல்களைக் களரிக்கு எடுத்து வந்தனர். பின்னர் தமிழின விடுதலைக்கு உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும்இ நாட்டுப்பற்றாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் மடிந்த உறவுகளுக்கும் ஞானலிங்கேச்சுரத்தில் அமைந்திருக்கும் ஈகைலிங்க நடுகல் முன் நினைவு வணக்கம்செலுத்தப்பட்டது. சமயங்களைக்கடந்து இனமான உணர்வுடன் நடடைபெற்ற இன் நிகழ்வில் உலகப்பொதுறையில்இருந்து கடவுள்வாழ்த்து ஓதப்பெற்று பொது வழிபாடு நடைபெற்றது.
உணர்ச்சிப்பூர்வ வரவேற்புரை
பாவலர்அறிவுமதி ஐயா, திருமதிஆதிலட்சுமி சிவகுமார் (தமிழர் களறி), திரு. கந்தசாமி பார்த்தீபன் (தமிழ்க் கல்விச் சேவை) செல்வி அபினயா கணபதிப்பிள்ளை (அக்கினிப்பறவைகள்), திரு. நடராசா சிவயோகநாதன் (மதியுரைஞர், சைவநெறிக்கூடம்), திரு. அன்ரன் பிறான்சிஸ் (தமிழ்க்கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், பேர்ன்) ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தனர். வரவேற்புரையினை ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக வழங்கினார். மேலும் நடைபெற்ற நிகழ்வுகளைதிரு பொன்னம்பலம் முருகவேள் மற்றும் திரு. சபாரஞ்சன் ஆகியோர் தொகுத்தளித்தனர்.
ஈழப்போரின் இயலிசை நாடகம்
ஆசியுரையினை திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனது உரையில் நமது தொன்மைமிக்க வாழ்வியலை, நமது தாயகக்கோட்பாட்டை, வீரமும் ஈகையும்நிறைந்த நமது போராட்ட வரலாற்றை நாம் நன்கறிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதனை பேணிப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியிடம் உரியவாறு ஒப்படைக்கவேண்டும். இது இன்றைய தலைமுறையினராகிய வரலாற்றுக் கடமையாகும், இதில் அக்கினிப்பறவைகள் இணைந்திருப்பது நிறைவினை அளிக்கிறது எனக் குறிப்பிட்டார். நெருப்பின்சலங்கையாக திருக்கோணணேஸ்வரா நடனாலய மாணவிகள் எழுச்சி நடனத்தினை வழங்கினர். ஈழவிடுதலைப்போர் இயலிசை நாடமாக மக்கள் மனதில் நிறைவான நிகழ்வாக அமைந்தது.
நூல் வெளியீடு
Sri Lanka: 60 Years of Independence and Beyondநூல் திரு. அன்ரன்பொன்ராசா, திரு. கணநாதன் ராஜ்கண்ணாஆகியோரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அடுத்தநூல் வெளியீடாக பூமாஞ்சோலை இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள சிவ. ஆரூரன்அவர்களின் படைப்பு திரு. செங்கோல், திரு. செம்பருத்தி ஆகியோரால் வெளியிடப்பட்டது. ஈழவிடுதலைப் போரில் கைதிகளாக பல் இன்னல் எதிர்கொண்டுநாளும் வாழும் வாழ்க்கைமுறை உணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது. நூலின் வரவு இந்நூலாசிரியரின் வழக்குச்செலவிற்கு வழங்கப்படுவதாக களறியால் அறிவிக்கப்பட்டது. நிறைவாக"Structures of Tamil Eelam" A Handbook நூல் அக்கினிப்பறவைகள்அமைப்பால் வெளியிடப்பட்டது. ஒரு இனத்திற்கு வழிகாட்டி நிற்பது அதன் வரலாறேயாகும் ஒரு இனத்தின் உண்மையான வரலாறு அதன் சந்ததிகளுக்கு சரிவரஎடுத்துச்செல்லப் படவில்லையாயின் அந்த இனம் இருப்பிழந்துகாலவோட்டத்தில் கரைந்துபோய்விடும் எனும் வரிகள் எதிரொலிக்க நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.