பப்புவா நியு கினியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்... சுனாமி அபாயம் நீங்கியது!
சிட்னி: பப்புவா நியூ கினியாவில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் கடற்கரை, துறைமுகப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியதாக எந்தவித தகவலும் பதிவாகவில்லை என்று அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் கோகோபோ, எனும் நகரை மையமாக வைத்து ஏற்பட்ட இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தை தொடர்ந்து, கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கம் காரணமாக, சுமார் ஒரு மீட்டர் என்ற உயரத்தில், சுனாமி அலைகள் ஏற்படும் என்று பசிபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேநேரத்தில் இதுவரை கடற்கரை பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என ராபல் துறைமுகத்தில் பதிவான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சுனாமி ஆபத்து நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இங்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக எழுந்த சுனாமி அலைகள் ராபல் துறைமுகத்தை தாக்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து சேதம் தவிர்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் 4 நாட்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புவித் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும் "நெருப்பு வளையம்' (ரிங் ஆஃப் ஃபயர்) என்று அழைக்கப்படும் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால், அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.