"பக்" லாஞ்சர் அழிப்பு?.. தாக்குதல் நடத்தியவர்களும் படுகொலை?... வெளிவராத பயங்கர தகவல்கள்!
கீவ்: மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் தாக்கித் தகர்க்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் பக் ஏவுகணை லாஞ்சர் ஒன்று சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அனேகமாக அந்த லாஞ்சரிலிருந்துதான் பக் ஏவுகணை ஏவப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மலேசிய விமானம் தாக்கப்படுவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பு இந்த லாஞ்சர் அந்தப் பகுதியில் காணப்பட்டுள்ளது. மேலும் அதில் நான்கு பக் ஏவுகணைகளை படுக்க வைத்த நிலையில் மூடப்பட்டு காணப்படுகிறது. வீடுகள் நிரம்பிய ஒரு பகுதியில், மரத்திற்கு கீழே அந்த லாஞ்சர் காத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் தாக்குதலுக்குப் பின்னர் இந்த லாஞ்சர் ரஷ்யப் பகுதிக்குள் போனதையும் உக்ரைன் உளவுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அப்போது அந்த லாஞ்சரில் 2 ஏவுகணைகள் இல்லை என்றும் உக்ரைன் கூறுகிறது.
டோரஸ்
உக்ரைனின் டோரஸ் நகரில்தான் இந்த லாஞ்சர் காணப்பட்டுள்ளது. இது புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் உள்ளது.
ரஷ்ய ஆதரவில்லாமல் சாத்தியமில்லை
பக் ஏவுகணைகள் ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எந்த நாட்டிடமும் இத்தகைய ஏவுகணைகள் இல்லை. எனவே ரஷ்ய ஆதரவு இல்லாமல் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்று அமெரிக்க நிபுணர்களும் கூறி வருகிறார்கள்.
10 மைல் அருகே
டோரஸ் நகரானது, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியிலிருந்து 10 மைல் தொலைவில்தான் உள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லை
மேலும் இந்த பக் ஏவுகணை லாஞ்சர் நிறுத்தப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. இங்குள்ள வீடுகள் அனைத்துமே சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
ஏவுகணையுடன் செல்லும் லாஞ்சர்
அதேபோல ஏவுகணைகளுடன் கூடிய லாஞ்சரானது சாலையில் படு ரகசியமாக செல்லும் ஒரு வீடியோவும் கிடைத்துள்ளது. அந்த சாலையிலும் ஆள் நடமாட்டமே இல்லை. அந்த லாஞ்சர் மட்டும் தனியாக செல்கிறது.
2 ஏவுகணை வீசித் தாக்குதல்...?
அதேபோல இன்னொரு வீடியோ. அதே போன்ற ஒரு லாஞ்சர் படு வேகமாக ரஷ்யப் பகுதியை நோக்கி விரைகிறது. இது விமானத் தாக்குதலுக்குப் பின்னர் எடுத்த வீடியோவாகும். இப்போது அந்த லாஞ்சரில் 2 ஏவுகணைகள் இல்லை. அனேகமாக மலேசிய விமானத்தின் மீது இந்த இரண்டு ஏவுகணைகளும் வீசப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ரஷ்யாவை நோக்கி இது விரைவதைப் பார்க்கும்போது வேலையை முடித்து விட்டு மீண்டும் ரஷ்யாவுக்கே அந்த ஏவுகணை லாஞ்சரை திருப்பி அனுப்புவது போலத் தோன்றுகிறது.
அழித்திருக்க வாய்ப்பு
ரஷ்யாவுக்குள் அனுப்பப்பட்டு விட்ட அந்த லாஞ்சர் தற்போது அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எந்தவிதமான ஆதாரமும் யாருக்கும் கிடைத்து விடக் கூடாது என்பதால் தாக்குதலை நடத்திய அந்த லாஞ்சரையும், மீதமுள்ள ஏவுகணைகளையும் ரஷ்ய ராணுவம் எரித்து சாம்பலாக்கியிருக்கும் என்றும் நம்ப்பபடுகிறது.
ஏவுகணைகளை ஏவியவர்களும் கொலை...?
அதை விட பயங்கரமானதாக கூறப்படுவது என்னவென்றால் பக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்திய புரட்சிப் படையினரும் கூட தற்போது படையின் தலைமையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதுதான். ஏனென்றால் இவர்கள் யார் கையிலாவது கிடைத்து உண்மை வெளியாகி விடலாம் என்பதால் அவர்களையும் புரட்சிப் படையினர் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இன்னும் என்னவெல்லாம் பயங்கர ரகசியங்கள் அடங்கியிருக்கிறதோ இந்த விவகாரத்தில்....!