முற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்த துருக்கி!
அங்காரா: அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது துருக்கி அரசு.
அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே ஒரு நல்ல உறவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் துருக்கியில் உளவு வேலை பார்ப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சிறையில் அடைக்க துருக்கி நாட்டு அரசு உத்தரவிட்டது.
ஆனால் பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை நாடு கடத்துமாறு அமெரிக்கா அரசு துருக்கியிடம் கேட்டுக்கொண்ட து. அமெரிக்காவின் கோரிக்கையை துருக்கி நிராகரித்து விட்டது. இதனால் துருக்கி அமெரிக்காவுக்கு கடும் பிரச்சனை உருவாகி உள்ளது.
இதன்காரணமாக அமெரிக்காவிற்கு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அலுமினியம் மற்றும் உருக்கு மீது 2 மடங்கு வரி விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சனையால் துருக்கியின் பண மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
இதனால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி, அமெரிக்காவை பழி வாங்கும் எண்ணத்தில், அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்கான அறிவிப்பை துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டார்.
துருக்கி பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் புவாட் ஒக்டாய் கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின்மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்து உத்தரவு போட்டு உள்ளது.