அடையாளம் தெரியாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி... சிரியா எல்லையில் பதற்றம்!!
அங்காரா: துருக்கி வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு அறிவித்துள்ளது. துருக்கி சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவுக்கு சொந்தமான போர் விமானமாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தங்களது போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சிக் குழுவுக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. அதே நேரத்தில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுக்களை முதன்மை இலக்காகக் கொண்டு ரஷ்யா உக்கிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனிடையே அண்மையில் துருக்கி வான்பரப்புக்குள் ரஷ்யா போர் விமானம் தவறுதலாக நுழைந்துவிட்டது. துருக்கியின் எச்சரிக்கையை அடுத்து ரஷ்யா விமானம் சிரியா எல்லைக்குள் திரும்பியது.
இந்நிலையில் இன்று துருக்கி தமது எல்லைக்குள் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத விமானம் ஒன்றை தமது விமானப் படை சுட்டு வீழ்த்திவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்த விமானம் ரஷ்யாவுக்கு சொந்தமானது என முதலில் கூறப்பட்டது. ஆனால் ரஷ்யாவோ தங்களது போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக விமானப் படை தளத்துக்கு திரும்பி இருக்கின்றன என அறிவித்துள்ளது.
இதனால் துருக்கி சுட்டு வீழ்த்தியது எந்த நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.